search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 27-ந்தேதி தெப்பத்திருவிழா

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(மார்ச்) 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(மார்ச்) 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான 27-ந் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு, ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேருகிறார். அதன்பின் அங்கிருந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு, உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    அதைத்தொடர்ந்து 28-ந் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 29-ந் தேதி கற்பக விருட்ச வாகனத்திலும், 1-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 2-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 3-ந் தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் 7-ம் நாளான 4-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 5-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் புறப்பட்டு, மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார்.

    இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். 6-ந் தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு, பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×