search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி அஸ்திர ஹோமம் நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி அஸ்திர ஹோமம் நடந்ததை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற அஸ்திர ஹோமம்

    தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற அஸ்திர ஹோமம் நடந்தது. இதில் 80 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு வருகிற 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளன.

    கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டி தஞ்சையில் 8 திசைகளிலும்(அஷ்ட திக்குகள்) உள்ள காளியம்மன் கோவில்களிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கீழவாசலில் உள்ள உக்கிரகாளியம்மன் கோவில், மேலஅலங்கம் வடபத்திரகாளியம்மன் கோவில், வல்லம் ஏகவுரி அம்மன் கோவில், வெண்ணாற்றங்கரை கோடியம்மன் கோவிலில் யாகம் நடந்தது.

    மேலும் தெற்கு வீதி காளிகாபரமேஸ்வரி கோவில், வடக்குவாசல் மகிஷாசுரமர்த்தினி கோவில், ராஜகோபாலசாமி கோவில் தெருவில் உள்ள வடபத்திரகாளியம்மன் கோவில், பூமால் ராவுத்தர் தெருவில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவில் ஆகிய 8 காளியம்மன் கோவில்களிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் சாந்தி ஹோமம் நடத்தப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக தஞ்சை பெரியகோவிலில் உள்ள நடராஜர் சன்னதி முன்பு வேதபாராயணத்துடன் அஸ்திர ஹோமம் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலையில் முதல் கால பூஜையும், மாலை 4 மணிக்கு 2-ம் கால பூஜையும், இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3-ம் கால பூஜையும் நடக்கிறது.

    சிவபெருமானின் 5 ஆயுதங்களான சிவஸ்திரம், அகோர அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பிரத்தீங்கர அஸ்திரம், யோமாஸ்திரம் ஆகியவற்றை ஹோமத்தில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டது. இதில் 80 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், திருக்கழுக்குன்றம் அகத்திய கிருபா அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×