search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக நின்றிருந்த காட்சி.
    X
    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக நின்றிருந்த காட்சி.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலத்தை உத்தராயண புண்ணியகாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் கொடியேற்றினர்.

    அப்போது சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மாட வீதியில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உத்தராயண புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு மார்கழி மாத இறுதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி உத்தராயண புண்ணியகாலம் தாமரை குளத்தில் தீர்த்தவாரிக்கு சென்று வருதல் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலை 5.40 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து வைகுண்ட வாசல் வழியாக அண்ணாமலை மலையை நோக்கி தீபாரானை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வைகுண்டவாசல் வழியாக சென்று அரோகரோ கோ‌ஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×