search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாமனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    வாமனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    வாமனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

    நெல்லிக்குப்பம் அருகே வாமனபுரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லிக்குப்பம் அருகே திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த அம்புஜாலட்சுமி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 12 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி சாமிக்கு காலை 7 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வாமனபுரீஸ்வரர் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (புதன்கிழமை) ரோகிணி நட்சத்திரத்தையொட்டி கோவிலில் தீபம் ஏற்றும் விழா நடைபெற உள்ளது. இதில் வாமனபுரீஸ்வரர் முன்னிலையில் கோவில் முன்பு உள்ள மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×