search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாலாபிஷேக பூஜைக்காக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தபோது எடுத்த படம்.
    X
    பாலாபிஷேக பூஜைக்காக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தபோது எடுத்த படம்.

    தஞ்சை பெரியகோவிலில் பாலாலயம்

    கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பாலாலயம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி பெரிய கோவிலில் நேற்று பாலாலயம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை கடந்த 29-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடந்தது.

    அதன்படி முதல்கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதன் பின்னர் தீபாராதனை முடிந்து காலை 7.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது.

    பின்னர் 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவமும், தீபாராதனையும் நடந்தது. பாலாலயம் நடைபெற்றதையொட்டி பெரியகோவிலில் உள்ள அனைத்து மூலவர் சன்னதிகளும் அடைக்கப்பட்டன.

    முன்னதாக மூலவ மூர்த்திகளின் அருட்சக்தியை கலசங்களில் கலாகர்ஷனம் செய்து யாகசாலைக்கு எடுத்துச்சென்ற பிறகு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளும் அடைக்கப்பட்டன. பெரிய நந்தி, சிறிய நந்திகள் மற்றும் பிற தெய்வங்கள் எல்லாம் வெள்ளைநிற துணியால் மூடப்பட்டிருந்தது.

    பாலாலயம் முடிந்த பின்னர் பாலாலய திருமேனிகளில் அருட்சக்தியானது வேதசிவாகம முறைப்படி சேர்க்கப்பட்டு, அவைகள் மட்டுமே பெருவுடையார் சன்னதி முன் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருள செய்யப்பட்டன. தொடர்ந்து செப்புதிருமேனியால் ஆன பெருவுடையார், பெரியநாயகி அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மற்ற மூலவர்களுக்கு பதிலாக ஆவாஹணம் செய்யப்பட்ட படத்திற்கு பூஜைகள் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இனி பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் முடிந்த பின்னரே கருவறை மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×