search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா

    பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலிலும் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

    7 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் 6 நாட்கள் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, 6.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு, இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் திருநாளான 9-ந் தேதி சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    7-ம் திருநாளான 10-ந்தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதலும், மாலை 6 மணிக்கு மேல் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபஸ்தம்பத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 7-ம் நாளான திருக்கார்த்திகை அன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×