search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
    X
    ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

    வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம்(டிசம்பர்) 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 5-ந் தேதி மோகினி அலங்காரமும், 6-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது. 12-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 13-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 15-ந் தேதி தீர்த்தவாரியும், 16-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இதில் ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல, மேளதாளம் முழங்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி முகூர்த்தகாலுக்கு மரியாதை செலுத்தியது.

    முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி, திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×