search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாரகாசூரனை வதம் செய்த பின்னர் கழுகாசலமூர்த்திக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.
    X
    தாரகாசூரனை வதம் செய்த பின்னர் கழுகாசலமூர்த்திக்கு தீபாராதனை நடந்தபோது எடுத்த படம்.

    தாரகாசூரனை வதம் செய்த கழுகாசலமூர்த்தி

    கழுகுமலையில் நடந்த கந்தசஷ்டி திருவிழாவில் தாரகாசூரனை கழுகாசலமூர்த்தி வதம் செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் கழுகாசலமூர்த்தி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    5-ம் நாளான நேற்று காலையில் சுவாமி வெள்ளி சப்பரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மதியம் கோவில் மேல வாசலில் கழுகாசலமூர்த்தி, யானை முகம் கொண்ட தாரகாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இரவில் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. காலையில் சுவாமி பல்லக்கிலும், வள்ளி-தெய்வானை அம்பாள்கள் பூஞ்சப்பரத்திலும் எழுந்தருளி, வீதி உலா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடைபெறுகிறது.

    மதியம் 3 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி, வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். இரவில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

    7-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. 8-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவில் சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூஞ்சப்பரத்திலும் வீதி உலா வந்து, தபசு மண்டபத்தில் எழுந்தருளி, தபசுக்காட்சி நடைபெறும்.

    9-ம் நாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் தெய்வானை அம்பாள் பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து கழுகாசலமூர்த்தி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 10-ம் நாளான 6-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமி-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பெரிய பல்லக்கிலும், சோமாஸ்கந்தர் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறுகிறது.

    11-ம் நாளான 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×