search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்த சஷ்டி"

    • சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் 17 -ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவும், 6-ம் ஆண்டு தீ மிதி விழாவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருக்கல்யாணம்

    கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (சனிக்கிழமை) மாலை வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் வள்ளி- தெய்வானை வசந்த் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் 6-ம் ஆண்டு குண்டம் தீ மிதி விழா நடைபெறுகிறது.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுப்ரமணிய சாமி ஆசி பெற விழா கமிட்டி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கந்த சஷ்டி விழா நடந்தது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. தினமும் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்கார நிகழ்ச்சி நடை பெற்றது.

    முன்னதாக வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு பாலபிஷேகம் முடிந்த பின், ஜெயந்திநாதர் அலங்காரத்தில் முத்தா லம்மன் திடலில் எழுந்த ருளிய அவரை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். அங்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூர பத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி சிவப்பு அலங்கா ரத்தில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு எழுந்தரு ளினார்.

    அங்கு அம்மனிடம் இருந்து பெற்ற சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக கந்த சஷ்டி தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி-தெய் வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் கோவில் வாசலில் உள்ள சிறிய சட்டத் தேரில் எழுந்த ருளினர்.

    இதில் பக்தர்கள் அரோ கரா கோஷத்துடன் ரத வீதிகள், கிரிவல பாதையில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இன்று மாலை பாவாடை தரிசன மும், அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    மேலும் மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி களுக்கும் வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர்.
    • பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தினமும் உச்சிகாலத்தின்போது கல்பபூஜை, சண்முகர் தீபாராதனை, தங்கமயில் புறப்பாடு, தங்கச்சப்பரம் புறப்பாடு, வெள்ளி காமதேனு புறப்பாடு ஆகியவை நடைபெற்றன.

    கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஏராளமான பக்தர்கள் தங்கி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். 6-ம் நாளான இன்று பக்தர்கள் வாழைத்தண்டுடன் பழங்கள் கலந்த உணவை அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி நேற்று சூரன்களின் பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இன்று நண்பகலில் உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பின் 3.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார். இதனை முன்னிட்டு இன்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகசூரன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்குமேல் வடக்கு கிரிவீதியில் முதலாவதாக தாரகசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.

    பழனியின் 4 கிரிவீதிகளிலும் 4 சூரர்கள் வதம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு மலைக்கு வேல் கொண்டு செல்லப்படும். அங்கு பராசக்தி வேலுக்கு சம்ரோக்சன பூஜை செய்யப்பட்டு பின்னர் அர்த்தசாம பூஜை நடைபெறும்.

    சூரசம்ஹாரத்தை காண பழனி கோவிலுக்கு இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத்தொடங்கினர். பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு முன்பாகவே சாமி தரிசனம் செய்ய நீண்டவரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர்(பொறுப்பு) லட்சுமி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர்.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு பல்வேறு அபிஷேகத்துக்கு பின், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று சில பக்தர்கள் சிவன், கிருஷ்ணர், விநாயகர், முருகர், ஔவையார், நாரதர் உள்ளிட்ட சுவாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்தி நாதருக்கும் அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகார உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடக்கிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூரசம்ஹாரம் நடைபெறும் திருச்செந்தூர் கடற்கரையில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நகரை சுற்றி 20 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. சூரசம்ஹாரத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

    இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண வேண்டி நேற்று அதிகாலை முதலே உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அவர்கள் கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் அலைகடல் என கோவிலில் திரண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    திருசெந்தூர் கடற்கரை பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 21 தற்காலிக கூடாரங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வரும் நிலையில் மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • நாளை நடக்கிறது
    • இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் 8-30மணிக்குபிரசாதம் வழங்குதலும் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்ட லில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 38-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் இந்த கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு நிர்மால்யபூஜையும் 7.30 மணிக்கு சிறப்பு வழி பாடும். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும்8-30மணிக்குபிரசாதம் வழங்குதலும் நடந்து வருகிறது.

    6-ம் திருவிழாவான நாளை(சனிக்கிழமை) காலை 6-30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலசபூஜை போன்றவை நடக்கிறது.8மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு சூரன் பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதேபோல கன்னியா குமரி மறக்குடி தெரு சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருவிழாவான நாளை முதல் முறையாக இந்த கோவிலில் சூரசம்கார விழாநடக்கிறது.மேலும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்ரமணியசாமி கோவில், தோவாளை திருமலை முருகன் கோவில், சொக்கர் கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    • சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 6 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி உற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    சனிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 19-ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.
    • கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்காரத்தெ ருவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சை ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலமாக இத்தலம் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் மூன்றாம் நாளான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமி பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

    • அன்னதானம் நடைபெற்றது
    • முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி பாலா பீடத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதியில் 25-வது கந்த சஷ்டி விழா தொடங்கியது.அன்னை பாலாவுக்கும், வள்ளி தெய்வயானை உடனுறை முருகனுக்கும் பாலாபீடத்தில் நிர்வாகி மோகன்ஜி ஷண்முக தீபம் ஏற்றி அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் ஆராதனையை செய்தார்.

    கந்த சஷ்டி விழாவுக்காகவே பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி எழுதி, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிந்தையெல்லாம் அந்த கந்தன் வசம், சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம் என்ற இசைகுறுந்தகட்டின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது. குருஜி பாபாஜி சண்முக மந்திரம் ஓதினார்.

    விழாவுக்கு திரளாக வந்த அன்பர்களுக்கு வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன் புகைப்படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிறைவாக பாலாபீட செயலாளர் முரளிதரன் முன்னிலையில் அன்னதானம் நடைபெற்றது.

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    நேற்று மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தங்கரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நிகழ்ச்சியில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் நீராடியும், நாழிகிணறு தீர்த்தத்தில் நீராடியும் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். பலர் 6 நாட்களும் பால், எழுமிச்சைச்சாறு பருகி கந்த சஷ்டி கவசம் பாடியும் , பஜனை பாடல்கள் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

    2-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் எழுந்தருளினார்.

    அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    7-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13-ந்தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

    சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும்.

    மதியம் 3.15 மணிக்கு மலைக்கோவிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோவிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும். மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனைதொடர்ந்து 19-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் தனுர்லக்கினத்தில் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    சூரசம்ஹாரத்தையொட்டி 18-ந்தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×