search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுந்தரேசுவரருடன் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.
    X
    சுந்தரேசுவரருடன் பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததை படத்தில் காணலாம்.

    ஆவணி மூல திருவிழா: மாணிக்கம் விற்ற லீலை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல் லீலை’ நடந்தது. இதற்கான அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த 1-ந் தேதியில் இருந்து தினமும் சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் திருவிழா நடக்கிறது. நேற்று ‘மாணிக்கம் விற்ற திருவிளையாடல் லீலை’ நடந்தது. இதற்கான அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

    ‘மாணிக்கம் விற்ற லீலை’க்கான புராணம் வருமாறு:-

    மதுரையை வீரபாண்டியன் என்ற மன்னன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். ஒரு சமயம் அரசன் வேட்டையாட சென்ற போது புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் அரசனது காமக்கிழத்தியரின் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணிமகுடத்தையும் கவர்ந்து சென்றனர். அப்போது இளவரசனுக்கு முடிசூட அமைச்சர்கள் முடிவு செய்தனர். ஆனால் அரண்மனையில் இருந்த மணிமகுடம் உள்ளிட்டவை களவு போனதை அறிந்து அவர்கள் சோமசுந்தர பெருமானிடம் முறையிட எண்ணி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார்-யார் எந்த மணியை அணிய வேண்டும்? என்பனவற்றையும் கூறினார். மேலும் புதிய மகுடத்தை இளவரசனுக்கு சூட்டி அவரை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி இறைவன் மறைந்தார்.

    அதன்பின்னர் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்க பெற்று மக்கள் நலமுடன் வாழ்ந்தார்கள்.

    அபிடேக பாண்டியனும் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்று புராண வரலாறு கூறுகிறது.

    இந்த வரலாற்றை கூறும் மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல விழாவில் நேற்று இரவில் சுவாமி கைலாசபர்வதம், அம்மன் காமதேனு வாகனங்களில் எழுந்தருளி பாண்டிய வேளாளர் தெரு, மேலமாசி வீதி, ஆவணி மூலவீதி கீழபட்டமார் தெரு, வடக்கு கிழக்கு சித்திரை வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    Next Story
    ×