search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோவில் கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.
    X
    மலைக்கோவில் கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    பழனி முருகன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது

    பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழாவையொட்டி 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பழனி முருகன் கோவிலில் மாசி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. அதையொட்டி முருகனுக்கு அதிகாலை 5.30 மணிக்கு விளாபூஜையில் சந்நியாசி அலங் காரம், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரம், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.

    விழாவையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம் மற்றும் கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் 108 விளக்கு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. 110 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டனர். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் வெள்ளை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×