search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயற்கையை வழிபட்டால் இன்னல்கள் தீரும்
    X

    இயற்கையை வழிபட்டால் இன்னல்கள் தீரும்

    ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் ஸ்தல விருட்சமாக அமையும். கோவிலுக்குச் செல்லும் பொழுது அந்த விருட்சங்களை வழிபட்டு வந்தால் நமக்கு வாழ்வில் விருத்தி அம்சம் கூடுதலாகக் கிடைக்கும்.
    இயல்பாக இறைவனால் படைக்கப்பட்டது இயற்கை. மனிதனால் உருவாக்கப்பட்டது செயற்கை. என்ன இருந்தாலும் இயற்கை சக்தியை நம்மால் வெல்ல முடியாது. அதனால் தான் இயற்கைக்கு ஐம்பூதம் என்று பிரமாண்டமான உருவம் கொடுத்து அழுதும், தொழுதும் நம்முன்னோர்கள் வழிபட்டனர்.

    அதில் மண்ணில் முளைக்கும் தாவரங்கள் எண்ணில்லாத நற்பலன்களைத் தருவதாக அமைகின்றது. ஆரோக்கியம் சீராக வேண்டுமானால் மூலிகைகள், பழங்களை உண்ண வேண்டும். அதிர்ஷ்டம் நம்மை நாடிவரவேண்டுமானால் மாபெரும் மரங்களை நாம் ஆராதிக்க வேண்டும். மழை வரவேண்டுமானால், மரம் வளர்க்க வேண்டும். மழலை பிறக்க வேண்டுமானால் மரத்தைச் சுற்றி வந்து நாம் வழிபட வேண்டும்.

    இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். அதனால் தான் “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று இறைவனைக் குறிப்பிடுகிறார்கள். நீராய், நிலமாய், தீயாய், காற்றாய், நெடுவானாய் நிற்பவன் இறைவன்.

    கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுளை வழிபடுவதற்கு எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தாவரங்கள். தாவர வழிபாட்டின் மூலம் இறையருளைப் பெறமுடியும். தாவரங்களை, ‘விருட்சம்’ என்று நாம் அழைக்கின்றோம்.

    பழமை வாய்ந்த ஒவ்வொரு சிவாலயங்களிலும் பாருங்கள். ஒவ்வொரு சிவாலயத்திற்கும் ஒவ்வொரு விருட்சம் ஸ்தல விருட்சமாக அமையும். கோவிலுக்குச் செல்லும் பொழுது அந்த விருட்சங்களை வழிபட்டு வந்தால் நமக்கு வாழ்வில் விருத்தி அம்சம் கூடுதலாகக் கிடைக்கும்.

    சரணாகதி தத்துவத்தை உணர்ந்த பொழுதுதான் வழிபாடுகள் உருவாகத் தொடங்கின. நெருப்பை, ‘செந்தீ’ என உருவ வழிபாடாகவும், வாயு பகவானின் மகனை அனுமனாகவும் உருவங்களைக் கொடுத்து வழிபடத் தொடங்கினான்.

    இந்த வழிபாட்டினால் உள்ளம் சீராகியது. உடல் சீராவதற்கு மூலிகைகளைப் பறித்துச் சாப்பிட்டான். பின் ஆரோக்கியம் சீரானது. பிறகு இறைவழிபாட்டில் ஆர்வம் மிகுந்து தாவரங்களையும் போற்றி வழிபடத் தொடங்கினர். இப்படி உருவாகியது தான் தாவர வழிபாடு.

    வில்வம், துளசி, வேம்பு, அரசு, அருகு போன்றவை தெய்வீக மூலிகைகள். ‘வில்வம்’ என்பது சிவனுக்கு உகந்ததாகும். வில்வ தீர்த்தத்தை நமக்கு சிவாலயங்களில் தருவார்கள். வில்வ இலையை சிவனுக்கு அர்ச்சனை செய்தால் எண்ணற்ற பலன் கிடைக்கும். சிவராத்திரியன்று ஒரு வேடன் சிவனுக்கு வில்வ இலைகளை அர்ச்சித்து முக்தியடைந்த கதையைப் புராணங்கள் கூறுகின்றன.

    ‘துளசி இலை’ என்பது திருமாலிற்கு உகந்ததாகும். இது உஷ்ண குணம் வாய்ந்ததாகும். இருமல், சளி போன்றவற்றைப் போக்கும் தன்மையும், விஷ முறிவுத் தன்மையும் இந்த மூலிகைக்கு உண்டு.

    ‘வேப்பிலை’ என்பது அம்பிகைக்கு உகந்ததாகும். கிருமி நாசினி என்பதால் வீட்டில் வேம்பு வளர்த்து அதன் காற்றைச் சுவாசித்தால் எந்த நோயும் நன்மை அணுகாது.

    அரச மரங்களின் அடியில் வீற்றிருக்கும் நாகர், விநாயகர் போன்றவற்றை குழந்தை இல்லாத தம்பதியர் அதிகாலையில் சுற்றி வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால், அரச மரத்தின் காற்று, குழந்தைப் பேற்றைக் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. அரச மரத்தில் அத்தனை தேவதைகளும் குடியிருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

    அருகம்புல் என்பது விநாயகருக்கு மிகவும் உகந்தது. மிகுந்த குளிர்ச்சி மிக்கது. ரத்தத்தைச் சுத்தமாக்கும், விஷத்தைப் போக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் விநாயகருக்கு 16 அருகம்புல் வைத்து வழிபட்டால் மூன்று வருடங்களுக்குள் முன்னேற்றம் பலமடங்காக உயரும். அணிவிக்கும் பொழுது அதற்கான சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

    வீட்டின் முன்புறம் துளசி மாடம் வைத்து வழிபட வேண்டும். சுமங்கலிப் பெண்கள் துளசிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோலமிட்டு தினமும் துளசி பாடல்கள் மற்றும் லட்சுமி பாடல்களைப் பாடி வழிபட்டால் தனவரவு தாராளமாக வந்து சேரும். தாலி பாக்கியமும் கிடைக்கும்.

    இப்படி அற்புதமான தெய்வீக மூலிகைகளை அவசியம் ஒவ்வொருவரும் வழிபட வேண்டும். ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும் பொழுது விருட்சங்களை மறக்காமல் வழிபட்டு வாருங்கள்.

    விருச்சிக ராசிக்காரர்கள் கண்டிப்பாக விருட்ச வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். மற்ற ராசி நட்சத்திரக்காரர்கள் அவரவர்களுக்குரிய விருட்சங்களைத் தேர்ந்தெடுத்து அவை இருக்கும் ஸ்தலங்களில் சென்று வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். நிம்மதி கிடைக்கும்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூரில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்களை கோவிலின் முன்புறம் வைத்துள்ளனர். அவரவர் களுக்குரிய விருட்சங்களை வழிபட்டு வருவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    வாழை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோவிலில் சென்று வழிபட்டால் வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி என்ற ஊரிலுள்ள சிவாலயத்தில் ஸ்தல விருட்சமாக வாழை உள்ளது.

    பலா மரத்தை விருட்சமாகக் கொண்ட தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கீழ்ச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இங்குள்ள பலா மர விருட்சத்தை வழிபட்டால் குடும்ப ஒற்றுமை கூடும்.

    இயற்கையைப் போற்றுவோம், வாழ்வில் இன்பங்களை நாளும் பெறுவோம்.
    Next Story
    ×