search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புரட்டாசியில் புண்யாவர்த்தம்
    X

    புரட்டாசியில் புண்யாவர்த்தம்

    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள்.
    அகன்ட பாரத தேசத்தில் சுழன்று வரும் அறுபது வருடங்களிலும் உத்தமமான மாதமாக புரட்டாசி மாதம் திகழுகின்றது. சூரிய பகவான் தன் சொந்த வீடான சிம்மத்திலிருந்து புறப்படுகின்ற மாதம் கன்யா மாதம் என்றும் பாத்ரபத மாதம் என்றும் வழங்கப்படுகின்றது.

    இந்த பாத்ரவத மாதத்தில் தான் நம்முடைய மூதாதையர்களான பித்ருக்கள் நமக்கு பல விதமான பலன்களை தரத்தயாராக இந்த பூவுலகிற்கு வந்து நலம் தரப்போகும் எள்ளு கலந்த நீரை நெஞ்சார பருகி நமக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மையுடன் கன்றுக்கிரங்கும் பசு போல் நம்மை வாழவைக்க இவ்வகையகம் வரும் மஹாளய பசமும் இம்மாதத்தில் தான் வருகிறது.

    ஒருவன் தான் ஜனிக்கும் போதே தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் என்கிற மூன்று கடன்களுடன் பிறக்கிறான். பரந்தாமன் உறையும் தெய்வீக ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதாலும் வீட்டில் தெய்வீக முறைகள் யாகங்கள், ஹோமங்கள் செய்வதாலும் தன்னுடைய தேவ கடன் அடைக்கிறான்.

    மஹான்கள் பாதங்களில் நமஸ்காரங்கள் செய்து அவர்களது நல்ல உபதேசங்களை கேட்டு வாழ்க்கையை நடத்துவதாலும் நம் கோத்ர பூர்வர்களான ரிஷிகளின் சரித்திரத்தை கேட்டும் வணங்கி வழிபடுவதாலும் ரிஷியினுடைய கடனையும் அடைக்கிறான். மூன்றாவதானதும் முக்கியமானது பல சாபங்களை தவிர்க்க வல்லதாகவும் இருக்கிற பித்ரு கடனை ஒருவன் மாதா மாதம் அமாவாசை தினத்தில் கொடுக்கும் தர்பணங்களாலும் வருடாவருடம் செய்யும் திதி அன்ன சிராத்தத்தையும் சிரத்தையாக செய்து மேற்படி கடனை அடைக்கிறான்.

    மறந்ததை எல்லாம் மாசியிலும், மஹாளயத்திலும் கொடு என்பது முன்னோர்கள் வாக்கு. அதாவது மாசி மாத அமாவாசையும் மஹாளய அமாவாசையும் பித்ருக்களுக்கு மிகமிக உகப்பான நாட்கள். இந்த இரண்டு அமாவாசை தினங்களிலும் பித்ருக்களை மிகக் கட்டாயமாக பூஜித்து தர்ப்பண தானங்கள் செய்ய வேண்டும்.

    இது தவிர மாதா மாத அமாவாசையிலும் செய்ய வேண்டியது. இதில் ஏதாவது சில சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாமல் போனதையும் குடும்பத்திலுள்ள சகலமான காலஞ்சென்றவர்களின் நினைவாகவும், கட்டாயம் மகாளய அமாவாசையன்று தர்ப்பண தானங்களை செய்ய வேண்டும். பவுர்ணமி ஆரம்பித்து மஹாளய பஷமான 15 தினங்களிலும் செய்வது மிக சிறப்பு. முடியாதவர்கள் கட்டாயம் மஹாளய அமாவாசை தினம் செய்ய வேண்டும்.

    இத்தகைய மகிமை வாய்ந்த பித்ரு கடனை தீர்க்க பல புண்ணிய நதிகள், புண்ய புஷ்கரிணிகள் (குளங்கள்) இருக்கின்றன. இவைகள் கிடைக்காத பட்சத்தில் வீட்டிலேயே கும்பம் வைத்து நீர்நிரப்பி அதில் கங்கையை பூஜித்து அந்த தண்ணீரால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. மஹாளய அமாவாசையன்று தர்ப்பணத்துடன் திதி சிராத்தம் அன்ன ரூபமாக செய்வது சிறப்பு அல்லது அதற் குண்டான பொருட்களை வாங்கி ஆமரூபமாக செய்வதும் நல்லது. இதை சாதாரணமாக அரிசி கொடுப்பது என்பர். இதுவே ஆமரூபமான சிராத்தமாகும்.

    இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த பித்ருக்களுக்கு புண்ணிய நதி களோ புண்ணிய தீர்த்தங்களோ தென்புறத்தில் இருந்தால் மிக மிக மேன்மையானது. அப்படி சில புண்ணிய தலங்களில் கோவிலுக்கு தென்புறத்தில் புண்ணிய தீர்த்தங்கள் அமைய பெற்றிருக்கும். இந்த தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது பல மடங்கு பலனை தரவல்லது.

    இவ்வளவு பெருமைகளை உடைய புண்ணியதீர்த்தம் பாரத தேசத்தில் தென் பாகத்தில் திராவிட தேசத்தில் ஆன்மீகத்தின் அடித்தளமான தமிழ் நாட்டில் தலைநகராம் சென்னை பட்டினத்திற்கு அருகில் (சுமார் 45 கிலோ மீட்டர்) அமைந்துள்ளது. இந்த புண்ணிய பூமிக்கு புண்ணியாவர்த்த சேத்ரம் என்ற பெயர். இந்த புண்ணிய, புஷ்கரணிக்கு கிருந்தாப நாசினி என்றும் பெயர்.

    தற்போது இந்த திவ்ய தேச தலம் திருமழிசை ஆழ்வாராலும் திருமங்கை ஆழ்வாராலும் பாடல் பெற்று மங்களாசாசன திவ்யதேசமாக திரு எவ்வுள் என்றும் மருவி திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. புண்யாவர்த்தம் இந்த தலத்தில் தெரிந்தோ தெரியாமலோ புண்யம் செய்தால் அது பல மடங்கு ஆவர்த்தமாகிறது.

    ஒரு புண்ணியம் பண்ணினாலே பல பாபங்கள் நசித்து விடும் என்பது சாஸ்திரம். அப்படியிருக்க இந்த தலத்தில் யார் ஒருவரும் பாபம் பண்ண நினைக்க முடியாது. இத்தகு பெருமை வாய்ந்த புண்யாவர்த்த சேத்தரமான திருவள்ளூருக்கு புரட்டாசி மாதத்தில் வந்து ஸ்ரீவீரராகவனை வணங்கி ரிஷிகடனையும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி பித்ரு தர்பணங்கள் செய்து பித்ரு கடன்களையும் நிறைவேற்றி நீங்காத செல்வங்கள் நிறைந்து எங்கும் திருவருள் பெற்று இன்புற்று வாழ்வாங்கு வாழ வைத்திய வீரராகவனின் திருவடிகளில் வணங்கி வழிபடுவோம்.

    Next Story
    ×