என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahalaya amavasya"

    • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன், கார், பஸ்களில் வந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர். இன்று அதிகாலை 6 மணிக்கு அடிவார நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் சுமார் 5 மணி நேரம் மலை பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    சதுரகிரிக்கு செல்ல மலை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

    கட்டுக்கடங்காத கூட்டத்தால் மலை பாதைகளில் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மற்றும் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தினர். மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
    • அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    ராமேசுவரம்:

    புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. 

    பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

    • இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை.
    • மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையையே 'மகாளய அமாவாசை' என்று போற்றுகிறோம். பொதுவாக நாம் அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபடுவது வழக்கம். எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மூன்று அமாவாசைகள் கருதப்படுகிறது. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை' மற்றும் தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை' ஆகும்.

    இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்துசேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசை என்றும், மீண்டும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்றும் நம்பப்படுகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    நமது முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும், நமது முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அதுதவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

    பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நமது ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.

    மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமை ஆகும். எனவே அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தல் வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    நாம் மிகவும் எளிய முறையில் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முதலில் கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை போன்ற புனித நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிப்பதாக கருதப்படும் திசையான தெற்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.

    மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். வாழ்க்கை பிரகாசமாக அமையும். அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். நாம் காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.

    மகாளய அமாவாசை தினத்தன்று, நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

    • தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும்.
    • சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

    3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

    4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டை விரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

    5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

    7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச்செடிகளின் வேரில் ஊற்றிவிட வேண்டும்.

    8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன். என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

    10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...திருப்யத...திருப்யத என்று முடியும்.

    • மகாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள்.
    • எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.

    மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

    பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

    மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.

    ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

    • அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம்.
    • நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள் - பலன்கள்

    அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்

    துணி- ஆயுள் அதிகமாகும்

    தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்

    தீபம்- கண்பார்வை தெளிவாகும்

    அரிசி- பாவங்களை போக்கும்

    நெய்- நோய்களை போக்கும்

    பால்- துக்கம் நீங்கும்

    தயிர்- இந்திரிய சுகம் பெருகும்

    பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்

    தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்

    வெள்ளி- மனக்கவலை நீங்கும்

    பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

    தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்

    நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்

    பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

    பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.

    பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

    பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    • தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது.
    • சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள். உயர்சாதிகாரர்களுக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள்.

    திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

    தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய 12 பேர் மட்டும் தெரிந்தால் போதும்.

    சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.

    மகாளய அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.

    குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். முடிந்தால் மகாளயபட்ச நாட்களில் என்றாவது ஒருநாள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுங்கள்.

    அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் மகாளயபட்ச வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.

    • தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
    • சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.

    * மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

    * தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

    * துவாதசி பன்னிரண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான் என நம்பப்படுகிறது.

    * மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் போய் உரிய பலன்களை கொடுக்கும்.

    * பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.

    * மகாளாய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.

    DPI01250922: மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று மகாளய அமாவாசையையொட்

    மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இன்று மகாளய அமாவாசையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர். அங்கு காவிரி ஆற்றின் கரையோரம் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் மக்கள் வழிப்பட்டனர்.

    இதனால் இந்த இரு இடங்களில் இன்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பொதுமக்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.
    • கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    வழக்கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு வழிபட்டனர்.

    இதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரை மற்றும் ஆறுகளில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இன்று வழக்கம்போல் அனுமதித்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதியில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்கள் தர்ப்பணம் செய்து சென்றனர்.

    • முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர்.
    • பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.

    புண்ணிய நதியாக கருதப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேது கடலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர். பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.

    இதேப்போல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

    இதேப்போல் டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    • ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
    • சமயபுரம் மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம்.

    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

    இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் குவிந்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களை ஒரே இடத்தில் அமர வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீர் நிலைகள் மற்றும் கோவில் வளாக பகுதிகளில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் பலர் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு நடத்த முடியாமல் போனது. அவர்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர். தற்போது எந்தவித தடையும் இல்லாததால் திரளானோர் நீர் நிலைகளில் குவிந்தனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நோய் பரவல் காரணமாக எங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனது. அவர்களின் திதி நாட்களை மறந்தபோதிலும், இதுபோன்ற மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவோம்.

    தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் புனித நீராடி, மன நிறைவுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு உள்ளோம். இதன் மூலம் எங்களின் மனக்குறைகள் நீங்கிவிட்டது. எங்கள் குலம் செழிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

    இன்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரியம் மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.

    ×