என் மலர்tooltip icon

    வழிபாடு

    முன்னோர்களின் ஆசியை வழங்கும் மகாளய அமாவாசை
    X

    முன்னோர்களின் ஆசியை வழங்கும் மகாளய அமாவாசை

    • இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை.
    • மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையையே 'மகாளய அமாவாசை' என்று போற்றுகிறோம். பொதுவாக நாம் அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபடுவது வழக்கம். எல்லா மாதங்களிலும் வரும் அமாவாசையை விடவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மூன்று அமாவாசைகள் கருதப்படுகிறது. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை' மற்றும் தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை' ஆகும்.

    இறந்துபோன நம் முன்னோர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு புறப்படும் நாளே ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்துசேரும் நாளே புரட்டாசி மகாளய அமாவாசை என்றும், மீண்டும் பூமியிலிருந்து நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்றும் நம்பப்படுகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசையாகும். இந்த மகாளய பட்ச 15 நாட்களில் நமது முன்னோர்கள், பித்ருலோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

    நமது முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், நமது குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும், நமது முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அதுதவிர ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

    பொதுவாக அமாவாசை நாட்களில் நாம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வோம். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல் நமது ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே இந்த மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.

    மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நமது தலையாய கடமை ஆகும். எனவே அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்தல் வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    நாம் மிகவும் எளிய முறையில் மூதாதையர்களை நினைத்து தர்ப்பணம் செய்யலாம். முதலில் கோவில் குளங்கள் மற்றும் காவிரிக்கரை போன்ற புனித நீர் நிலைகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு நமது முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து கையில் உள்ள எள்ளின் மீது தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரை தர்ப்பைகளின் மீது ஊற்ற வேண்டும். இதுவே தர்ப்பண வழிபாடாகும். தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை முடித்ததும் பித்ருக்கள் வசிப்பதாக கருதப்படும் திசையான தெற்கு திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.

    மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு செய்வது சிறந்ததாகும். இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குல தெய்வத்தை வழிபடாத பாவமும், தோஷமும் நீங்கும். வாழ்க்கை பிரகாசமாக அமையும். அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபடலாம். நாம் காகத்திற்கு படைக்கும் உணவு, முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே நம்பப்படுகிறது.

    மகாளய அமாவாசை தினத்தன்று, நமது முன்னோர்கள் பூமிக்கு வரும்போது, அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து உங்களை வாழ்த்துவார்கள். உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

    Next Story
    ×