என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாளய பட்சம்"

    • மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும்.
    • தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.

    மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்–தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் தங்கி இருக்கும் 15 நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

    ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.

    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ருக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும்.

    எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.

    மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மூன்றிலும் அதிக புண்ணியத்தை தருவது மகாளய அமாவாசை ஆகும்.

    அதாவது 15 நாட்கள் பித்ருக்களை வழிபட வேண்டியதை மகாளய அமாவாசை குறிக்கிறது. பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து மகாளய அமாவாசை வரை உள்ள 15 நாட்களும் பித்ருக்கள் பூலோகத்தில் இருக்கும் காலமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 8- ந்தேதி மகாளயம் தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரையிலான 14 நாட்கள் பித்ருக்கள் நம்மை நெருங்கி இருக்கும் மகாளயபட்ச தினங்களாகும்.

    திதி என்னவென்று தெரியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணத்தை மிகவும் சிரத்தையாக செய்தல் வேண்டும். தர்ப்பணத்தை மிக, மிக ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. எளிமையாக செய்தாலே போதும், பித்ருக்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். இந்த 15 நாட்களில் வரும் ஒவ்வொரு திதியும், ஒவ்வொரு வகை பித்ருக்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்த திதி சிறப்பு நாட்களை பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    குறிப்பிட்ட திதியில் குறிப்பிட்டவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முழுமையான பலன்களை பெற முடியும்.

    அன்று நீங்கள் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும், அவர்களை மனம் குளிரச் செய்யும். அவர்களை மேலும் சாந்தி அடையச் செய்யும். தர்ப்பணத்தை வீட்டில் வைத்தும் கொடுக்கலாம். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீருங்கள். மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் நீராடி பித்ரு பூஜை செய்து, தமது மூதாதையர்களை வழிபடுவார்கள்.

    மகாளய பட்ச நாட்களில் தினமும் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம், விஷ்ணு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. முடியாதவர்கள் காகத்திற்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு அகத்தி கீரை வாங்கிக் கொடுக்கலாம். தர்ப்பணம் கொடுக்காவிட்டால் பித்ருக்கள் மனம் வருந்த நேரிடும். ஏனெனில் எந்த பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அந்த பித்ருக்களுக்குத்தான் தாகம் தீர்ந்து, ஆத்ம சக்தி அதிகமாக கிடைக்கும்.

    வாழும் காலத்தில் நாம் நம் முன்னோர்களிடம் அன்புடன் இருந்திருக்கலாம். அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். சிலர் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்க விட்டிருக்கலாம்.

    அந்த பாவத்துக்கு பரிகாரமாக, மகாளயபட்ச 15 நாட்களும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. எனவே மகாளய பட்ச 15 நாட்களும் மூதாதையர்களை ஆராதியுங்கள். யார் ஒருவர், பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறாரோ, அவருக்கு பித்ருக்கள் தெய்வ சக்திகளை பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள். முன்னேற்றம் தானாக வரும்.

    • நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
    • பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.

    இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே. அதுவே உங்கள் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என்றால் அவர்களை நீங்கள் முறையாக வழிபாடு செய்தால் அவர்களின் அத்தனை சக்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு கிடைக்க அவர்கள் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.

    உங்கள் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.

    நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அவர்களை நமது சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிட இயலாது என்பதால்தான் அவர்களுக்காக ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு ஹோமம்.

    சிருஷ்டியின் போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியை தொடங்குகிறாரோ அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உருவகிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

    புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், சமுத்திரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

    நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வளியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மகாளயபட்சத்தில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது. பொதுவாக வலது ஆள் காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.

    இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகத் தன்மையாகும்.

    மகாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்தில் உள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே, இதன் நிழலில் தான் பித்ருட தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.

    ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக் கணக்கான நம் கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மகாளயபட்ச தர்ப்பண தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காண்போமாக.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
    • அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.

    பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள்.

    இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

    தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

    மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

    மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிட கூடாது.

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

    நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.

    தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.

    சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

    நமது பித்ருகளிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

    • கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர்.
    • பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசு வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.

    இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது.

    அந்த குதிரையைத் தேடி சுமதியின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.

    கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபிலமுனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும்படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 ஆயிரம் பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள்.

    கேசினியின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந்தான். அவனது மகன் பகீரதன். பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால், பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே அவன் சிவபெருமானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.

    அவனது தவ வலிமையை மெச்சிய சிவபெருமான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார்.

    அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மாபுத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது.

    கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.

    அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது.

    கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர்களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

    பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

    • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை
    • வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது.

    பிதுர்பூஜை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் பல இடங்கள் உள்ளன. கடற்கரையோரங்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடலும் கூடும் கன்னியாகுமரி கடற்கரை, பூம்புகார், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரை ஆகியவை சிறந்தது என்பர். அதேபோல் காவேரிக் கரையோரத் திருத்தலங்களுக்கு அருகில் உள்ள நதிக்கரையும் போற்றப்படுகிறது.

    ஸ்ரீரங்கம் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித் துறை, திருப்பராய்த்துறை, திரிவேணிசங்கமம், திருச்சி ஜீயர்புரத்திற்கு அருகிலுள்ள முக்கொம்பு, திருவையாறு புஷ்யபடித்துறை, மயிலாடுதுறை நந்திக்கட்டம், கும்பகோணம் அருகிலுள்ள அரிசலாறு படித்துறை போன்ற நதிக்கரைகள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. குடந்தை மகாமகக் குளம், சக்கரத் தீர்த்தம் ஆகியவையும் சிறந்தவையாகும்.

    புனிதத் தலமான காசியில், கங்கை நதி ஓடிவரும் வழியில்உள்ள மணிகர்ணிகா புட்கரணியும் தலைசிறந்து விளங்குகிறது. மணிகர்ணிகா என்ற இடத்தில் செய்யப்படும் பிதுர்பூஜை பதினாறு தலைமுறைக்கு பித்ரு சாபங்களை நீக்கக்கூடியது.

    காசியில்உள்ள மணிகர்ணிகா நீர்நிலைக்குச் செல்ல வசதியில்லாதவர்களுக்கு, தமிழகத்தில் அதற்கு சமமாகக் கருதப்படும் மணிகர்ணிகா கட்டங்கள் உள்ளன. அங்கு முன்னோர்களுக்கான பிதுர்பூஜை செய்யலாம்.

    வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது. ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டு அருள்புரியும் சென்னை திருநீர்மலைக்கு அருகில் மணிகர்ணிகா புட்கரணி தீர்த்தம் உள்ளது. மேலும் திருவெள்ளறை திருத்தலத்தின் புனிதத் தீர்த்தங்களில் ஒன்று மணிகர்ணிகா தீர்த்தம். இந்த இடங்களிலும் பிதுர்பூஜை செய்வதால் நல்ல பலன்கள் கிட்டும்.

    சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலயத் திருக்குளம், கும்பகோணம் நன்னிலம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள திலதைப்பதியில் உள்ள புனித தீர்த்தம், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை, ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்தகங்கை குளக்கரை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடி ருத்ரபாதம், சேலம் சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின்பகுதியில்உள்ள தீர்த்தக்கட்டம் உள்ளிட்ட பல இடங்களும் சிறப்பு வாய்ந்தன.

    புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாத வயதானவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னரை அழைத்து பிதுர்பூஜை செய்யச் சொல்லி பயன்பெறலாம்.

    • எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன.
    • அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் சுலோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம் எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...

    "என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன.

    எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும். நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

    • எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
    • பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள் - பலன்கள்

    அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்

    துணி- ஆயுள் அதிகமாகும்

    தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்

    தீபம்- கண்பார்வை தெளிவாகும்

    அரிசி- பாவங்களை போக்கும்

    நெய்- நோய்களை போக்கும்

    பால்- துக்கம் நீங்கும்

    தயிர்- இந்திரிய சுகம் பெருகும்

    பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்

    தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்

    வெள்ளி- மனக்கவலை நீங்கும்

    பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

    தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்

    நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்

    பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.

    பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

    பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    • பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.
    • சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன.

    மகாளய அமாவாசை அன்று நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும் மறைந்த மூதாதையர்களுக்கும் உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும்.

    பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

    காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

    சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.

    பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கலாம். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறலாம். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்வார்கள்.

    தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் மகாளய அமாவாசைக்கு ஏற்ற இடமாகும்.

    • மகாளய என்றால் கூட்டாக வருதல் என்பது பொருள்.
    • மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.

    மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

    பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

    இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    இந்த 14 நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.

    ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

    • தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும்.
    • சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

    3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

    4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டை விரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

    5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

    6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

    7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச்செடிகளின் வேரில் ஊற்றிவிட வேண்டும்.

    8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

    9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன். என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

    10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...திருப்யத...திருப்யத என்று முடியும்.

    • உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
    • மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும்.

    சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்து விட்டது. சாதாரண மனிதன் முதல் சாதனையாளர்கள் வரை பலரும் அஞ்சக்கூடிய ஒரே தோஷம் பித்ருக்கள் தோஷம். இந்த பித்ருக்கள் தோஷம் ஏழைகளுக்கு மட்டுமே உண்டு பணக்காரர்களுக்கு இது செயல்படாத தோஷம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

    அதாவது பொருளாதாரரீதியாக எவர் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்களோ எந்த வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கவில்லையோ யாருக்கு தடை தாமதங்கள் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே பித்ரு தோஷம் உண்டு என்ற நம்பிக்கையும் உள்ளது.

    உண்மையில் இது தவறான நம்பிக்கை. உலகில் ஏழு வகை பிறப்புகள் உள்ளன என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஏழு பிறவிகளும் அவர் அவர்களின் பாவ புண்ணியங்களை பொருத்து அமையும்.

    அதாவது ஒரு ஆன்மாவின் நல்வினை, தீவினை முடியும் வரை அவர்களின் வினைக்கேற்ப தேவர்களாக, மனிதர்களாக, மிருகங்களாக, பறவைகளாக, நீரில் வாழ்வனவாக, ஊர்வனவாக, தாவரங்களாகப் பிறப்பு எடுப்பார்கள்.

    அவரவர்களின் ஊழ்வினைக்கு ஏற்ப எந்த பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம். எந்தப் பிறவி எடுத்தாலும் அது முன் வினைப்பயனின் தொடர்ச்சியாக தான் அமையும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. தேவர்கள் மனிதராக பிறக்கலாம், மனிதன் மிருகமாக பிறக்கலாம். மிருகம் பறவையாக பிறப்பு எடுக்கலாம். பறவையாக பிறந்தவர் ஊர்வனவாக பிறக்கலாம். நீர்வாழ் உயிராக பிறக்கலாம் அல்லது தாவரமாக பிறக்கலாம்.

    ஆக பிறவிப் பிணி உள்ளவர்களுக்கு மறு பிறவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அந்த ஆன்மா எடுக்கும் உடல் வடிவம் வேறுவேறாக இருக்குமே தவிர ஆன்மாவில் பதிந்து கிடக்கும் நல்ல, தீய வினைகள் மாறாது. மனிதர்கள் இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைக்கு ஏற்ப உடல் அமைப்பு இருக்கும். அதாவது அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற் போன்று உடல் வடிவம் உண்டாகும்.

    மனித உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றலானது தசா புத்திக்கு ஏற்ப சில நேரங்களில் வலிமையாகவும், சில நேரங்களில் வலுவற்றும் இயங்கும். தசாபுத்திக்கு ஏற்ப மனநிலையில் மாற்றம் உண்டாகி அவரவரின் வினைப் பயன்களை அனுபவிப்பார்கள்.

    ஒரு ஆன்மாவில் நல்வினைகள் அதிகமாக இருந்தால் அடுத்தடுத்து எடுக்கக்கூடிய பிறவிகளில் அவர்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்கள் லெளகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் விதத்தில் இருக்கும். தீய கர்மாக்கள் அதிகம் இருந்தால் வரக்கூடிய பிறவிகள் ஜாதகருக்கு மறுபிறவியே இருக்கக் கூடாது என்ற மனநிலையை ஏற்படுத்தும்.

    ஒரு உயிர் பூமியில் பிறப்பெடுக்க அதற்கு ஒரு தாய் தந்தையர் வேண்டும். அந்தத் தாய் தந்தையருக்கு ஒரு பெற்றவர்கள் இருக்க வேண்டும். ஒரு தாய் தந்தையர் தங்கள் பூர்வ ஜென்ம வினைக்கு ஏற்ற குழந்தைகளையே பெற்றெடுப்பார்கள். பிறப்பெடுக்கும் ஒரு உயிர் அனுபவிக்கும் நல்ல தீய கர்மாக்கள் பெற்றோர்களின் கர்மாவுடன் முன்னோர்களின் கர்மாவுடன் சம்பந்தப்பட்ட வையாகவே இருக்கும்.

    ஆக ஒருவன் பிறப்பெடுக்க கர்மா என்ற ஒன்று உண்டு என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும். சென்ற பிறவியின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டன், பாட்டி அத்தை, மாமா, மச்சான், பிள்ளைகள், நண்பர்கள் இவர்களுடன் ஏற்பட்ட உறவின் தொடர்ச்சியை முழுமை செய்ய கூடிய உருவ அமைப்பு உள்ள இடத்தில் ஆன்மா பிறப்பெடுக்கும்.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகள் அவரின் முன்வினையின் தொடர்ச்சியையும், அதனால் வரும் நன்மைகள் அல்லது தீமைகளையும் பிரதிபலிக்கும். ஒருவர் வாழும் பிறவியில் நல்லதைச் செய்தால் துன்பப்படுவதும், கெடுதல் செய்து சிறப்பாக வாழ்வதற்கும் முன்வினைத் தொடர்ச்சியே காரணமாக அமைகிறது.

     

    ஐ.ஆனந்தி

    சுருக்கமாக ஒரு ஆன்மாவின் செயல்களின் அடிப்படையில் அடுத்த பிறவி அமையும். பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதே மோட்சமாகும். ஆக இந்தப் பிறவியில் செய்யக்கூடிய நன்மை தீமைக்கு உள்ள பிரதிபலன் அடுத்த பிறவியிலேயே கிடைக்கும். அதைத்தான் நமது முன்னோர்கள் போகும் வழிக்கு புண்ணியம் சேர்த்து வைத்து விட்டு செல் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    ஒருவருக்கு வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும்.

    ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி நின்ற நட்சத்திர சாரம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சுய ஜாதகத்தில் 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால் அதாவது அந்த வீட்டில் சுபர்கள் வீற்றிருந்தால் அல்லது அந்த வீட்டுக்குடையவன் சுப வலிமை பெற்றிருந்தால், குரு பார்த்திருந்தால், அந்த வீட்டில் லக்னாதிபதி யோகமாக அமர்ந்திருந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் மிகுதியாக புண்ணிய காரியங்கள் செய்தவர் என்று கூறலாம்.

    இந்த அமைப்பு பெற்றவர்களின் ஜாதகத்தில் எந்தவித தோஷங்கள் இருந்தாலும் ஜாதகருக்கு பாதிப்பை கொடுக்காது. முன்வினையில் நல்ல கர்மாக்கள் இருப்பவர்களுக்கு இந்த பிறவியில் நல்ல பெற்றோர்கள் கிடைப்பார்கள். நல்ல குடும்பத்தில் பிறப்பார்கள்.

    உரிய வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் இன்பங்கள் உண்டாகும். குல கவுரவத்தைக் காப்பாற்றக்கூடிய நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் இருக்கும். ஸ்திர சொத்துக்கள் சேரும். குலதெய்வத்தின் அருள் கடாட்சம் கிடைக்கும். பூர்வீகத்தால் பயன் உண்டு. கெட்ட நோய்த் தாக்கங்கள் வராது. தேவைக்கு நல்ல பண வசதிகள் இருக்கும்.

    ஆயுள் சார்ந்த பயம் இருக்காது. பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் இருக்கும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் இடமே ஒருவரின் முன்வினை தொடர்ச்சியை சொல்லக்கூடிய ஸ்தானமாகும்.

    ஜோதிட ரீதியாக லக்னம் ( ஜாதகர்) பூர்வ புண்ணிய ஸ்தானம் (ஐந்தாமிடம்) பாக்கிய ஸ்தானம் (ஒன்பதாமிடம்) போன்ற இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்தும் பித்ரு தோஷத்தை தெளிவாக உணர முடியும். குறிப்பாக சூரியன், ராகு/ கேது, மாந்தி சம்பந்தம், 9-ம் அதிபதி ராகு/கேது, மாந்தி சம்பந்தம், சூரிய, சந்திர கிரகணத்திற்கு 7 நாட்களுக்கு முன், பின் பிறக்கும் குழந்தைகளுக்கு கடுமையான பித்ரு தாக்கம் உண்டு.

    சூரியன் ராகு சேர்க்கை தந்தை வழி பித்ரு தோஷத்தாலும், சூரியன் கேது சேர்க்கை தாய் வழி பித்ரு தோஷத்தாலும் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுக்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும்.

    பித்ருக்கள் தோஷம் வெளிப்படும் காலம்

    ஜனன கால ஜாதகத்தில் உள்ள சூரியன், சந்திரன், சனி பகவானை கோட்ச்சார ராகு, கேது சந்திக்கும் காலத்திலும் ஜனன கால ராகு மற்றும் கேதுவை கோட்ச்சார சூரியன், சந்திரன், சனி சம்பந்தம் பெறும் காலங்களில்பித்ரு தோஷம் மிகுதியாக வெளிப்படும். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களிலும், கீழ்கண்ட தசா புத்திகளிலும் பாதிப்பு வெளிப்படும்.

    சூரிய தசை ராகு புத்தி

    ராகு தசை சூரிய புத்தி

    சனி திசை ராகு புத்தி

    ராகு தசை சனி புத்தி

    சனி தசை கேது புத்தி

    கேது தசை சனி புத்தி

    கேது தசை ராகு புத்தி

    சந்திர தசை ராகு புத்தி

    ராகு தசை சந்திர புத்தி

    சந்திர தசை கேது புக்தி

    கேது தசை சந்திர புத்தி

    ஒருவருக்கு பித்ருக்களிடமிருந்து கிடைப்பது நல்லாசியா அல்லது கர்மவினை சார்ந்த பாதிப்பா என்பதை நிர்ணயிப்பது திதிசூனிய பாதிப்பு. தோஷம் தொடர்பான பாகங்கள்.

    திதி சூனிய பாதிப்பு இருந்தால் நிச்சயமாக அது தோஷமாக செயல்பட்டு ஜாதகருக்கு கர்ம வினை சார்ந்த பாதிப்புகளை தரும். அதே போல் தோஷம் தொடர்பான பாவங்களுக்கு சுபர்களின் சம்பந்தம் இருந்தால் அது ஜாதகருக்கு சுப பலன்களை வழங்கும்.

    ஒரு ஜாதகத்தில் உள்ள எத்தகைய தோஷமாக இருந்தாலும் அது எல்லா காலத்திலும் வேலை செய்யாது. குறிப்பிட்ட சில காலங்களில் மட்டுமே வேலை செய்யும். அதனால் எந்த காலத்தில் எந்த தோஷம் பாதிக்கும் என்பதை அறிந்து செயல்பட்டால் அந்த பாதிப்புகளில் இருந்து மீளக்கூடிய வழிபாடுகளை கடைபிடிக்க முடியும். ஒரு ஜாதகத்தில் உள்ள எந்த தோஷமாக இருந்தாலும் லக்னம் லக்னாதிபதியுடன் சம்பந்தப்படாத எந்த தோஷமும் ஜாதகரை தாக்காது பாதிக்காது.

    கிரக தோஷங்களை வெளிப்படுத்தக்கூடிய தசா புத்தி வராத காலங்களிலும் பாதிப்பு வராது.

    ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயிக்கக் கூடிய தோஷங்கள் அனைத்திற்கும் இதே முறையில் பலன் எடுக்க வேண்டும். தசா நாதன் அல்லது புத்திநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் சுபத்துவ நிலையில் இருந்தாலும் தோஷங்களால் பாதிப்பு வராது.

    அதே போல் தசை வராவிட்டால் என்ன புத்தி வரும் .அதிக வருடங்கள் கொண்ட தசாவின் புத்திகள் நடப்பில் வரும் காலங்களில் கோட்சார கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் புத்தி நாதனுக்கு சுப கிரகங்களின் பார்வைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறலாம். சிறிய தசைகளின் புத்தியாக இருந்தால் குறுகிய காலம் கண்ணிமைக்கும் முன் கடந்து விடும்.

    ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி தனது முன்னோர்களுக்கு பிதுர் கடன் செய்வது மானிடராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும். அந்த வகையில் தற்போது சந்திர கிரகணம் முடிந்து மகாளய பட்சம் ஆரம்பித்துவிட்டது. இந்த காலகட்டங்களில் முழுமையாக முறையாக பித்ருக்களை வழிபட்டால் இந்தப் பிறவியிலும் வரக்கூடிய பிறவியிலும் புண்ணிய பலன்கள் அதிகமாகும். பித்ரு தோஷம் பாதிப்பு வராது.

    மறைந்த முன்னோர்கள் மொத்தமாக கூடும் காலமான 15 நாளே மகாளய பட்சம். முன்னோர்கள் அனைவரும் கூட்டமாக வந்து தங்கும் இந்த நாட்களில் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். மகாளய பட்ச காலத்தில் பிரதமையில் துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். 3 தலை முறை தந்தை வழி, தாய் வழி முன்னோர்களை நினைத்து தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி முன்னோர் ஆத்மசாந்திக்காக வழிபாடு செய்ய வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து உதவலாம்.

    மகாளய பட்சம் என்னும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்தினால் புண்ணிய பலன்கள் உங்கள் தலைமுறைக்கு வந்து சேரும்.

    செல்: 98652 20406

    • ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.
    • பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    மகாளயத்தை 1. பார்வணம், 2. ஹிரண்யம், 3.தர்ப்பணம் என்று 3 வழிகளில் செய்யலாம்.

    1. பார்வணம் என்பது 6 பிராமணர்களை (பித்ருக்களாக) நினைத்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலியவர்களுக்கு ஹோமம் செய்து சாப்பாடு போடுவது.

    2. ஹிரண்யம் என்பது அரிசி, வாழைக்காய் முதலியவைகளைத் தந்து தர்ப்பணம் செய்வது.

    3. தர்ப்பணம் என்பது அமாவாசை போல் தர்ப்பணமாகச் செய்வது. இவற்றில் ஏதாவது ஒருவிதத்தில் பித்ருக்களுக்கு மகாளயத்தைச் செய்து தங்கள் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    ஒருநாள் மட்டும் மகாளயம் செய்பவர்கள் மகா பரணி (12-ந்தேதி வெள்ளி), மத்யாஷ்டமி (14-ந்தேதி ஞாயிறு), மகாதிவ்ய தீபாதம் (15-ந்தேதி திங்கள்), கஜச்சாயா (19-ந்தேதி வெள்ளி) ஆகிய நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மகாளயம் செய்யலாம். இவை மிகச் சிறந்த நாட்கள் ஆகும்.

    சன்யாசியாக சித்தியானவர்களுக்கு 18-ந்தேதி (வியாழக்கிழமை) அன்றும், விபத்துகளால் அகால மரணம் அடைந்தவர்களுக்கு 20-ந்தேதி (சனி) அன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயம் மற்றும் திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் செய்யும் மகாளயத்தை 21-ந்தேதி (ஞாயிறு) அமாவாசை அன்றும் செய்யலாம்.

    மகாளய பட்சத்தில் தாய், தந்தையருக்கு ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் நேர்ந்தால், சிரார்த்த நாள் அன்று சிரார்த்தம் செய்து விட்டு அதற்குப் பிறகு மற்றொரு நாளில் மகாளயத்தைச் செய்ய வேண்டும்.

    இந்த பட்சத்தில் மகாளயம் செய்ய முடியாதவர்கள் அடுத்த கிருஷ்ண பட்சத்தில் அதாவது அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள் செய்யலாம்.

    ×