search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா 23-ந்தேதி தொடங்குகிறது
    X

    தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா 23-ந்தேதி தொடங்குகிறது

    தஞ்சை பெரியகோவிலில் இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
    தஞ்சை பெரியகோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 15-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் ஒவ்வொரு நாளும் வராகி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது. முதல்நாள் காலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து கணபதி, வராகி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 24-ந்தேதி வராகி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், 25-ந்தேதி குங்குமம் அலங்காரமும், 26-ந்தேதி சந்தனம் அலங்காரமும், 27-ந்தேதி தேங்காய் பூ அலங்காரமும் செய்யப்படுகிறது.

    28-ந்தேதி மாதுளை அலங்காரமும், 29-ந் தேதி நவதானிய அலங்காரமும், 30-ந்தேதி வெண்ணெய் அலங்காரமும், அடுத்தமாதம்(ஜூலை) 1-ந்தேதி கனிவகை அலங்காரமும், 2-ந்தேதி காய்கறி அலங்காரமும், 3-ந்தேதி மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. மேலும் 3-ந் தேதி மாலை 5 மணிக்கு மேளதாளம் முழங்க கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கையுடன் நான்கு ராஜவீதிகளில் அம்மன் வீதிஉலா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு வராகி ஹோமமும், 10 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×