search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை பெரியகோவில்"

    • இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.
    • 11 ஆண்டுகளாக தினமும் சிவனுக்கு வில்வ இலையை வழங்கி வருகிறார்.

    இந்த உலகை படைத்தது இறைவன் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது. அந்த வகையில் சிவன் என்பவர் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். அந்த சிவனுக்கு தொண்டு செய்ய தனது கனவில் பணித்ததையடுத்து தினமும் சிவனுக்கு வில்வ இலையை அர்ச்சனைக்கு வழங்கி வருகிறார் ஒரு முதியவர். அதுவும் ஒரு நாள், 2 நாள் அல்ல, கடந்த 11 ஆண்டுகளாக, அதாவது 133 மாதங்களாக அவர் வில்வ இலையை வழங்கி வருகிறார்.

    அவ்வாறு வில்வ இலையை வழங்கி வருபவர், 71வயது முதியவரான கணேசன். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள ஆர்.சுத்திப் பட்டு. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பணி நிமித்தம் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தார்.

    சிவனுக்கு வில்வ வழங்கும் சிவபக்தரான கணேசன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

    பிரதோஷம் நடைபெறும் நேரத்தில் கருவூரார் சன்னிதியில் யாரும் வழிபடுவது இல்லை. அந்த நேரத்தில் 48 நாட்கள் தியானம் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தியானம் செய்வதற்கு அனுமதிகேட்டார். அன்று இரவு அவருடைய கனவில் இறைவன் தோன்றி, குருப்பெயர்ச்சி அன்று திருச்செந்தூர் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து தியானம் செய்' என்று கூறினாராம்.

    அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு திருச்செந்தூர் சென்று வழிபட்டு விட்டு வந்து கருவூரார் சன்னிதியில் தியானம் செய்து வழிபட்டார். 48 நாட்கள் தொடர்ச்சியாக தியானம் செய்து முடித்த நிலையில், மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், தினமும் பெருவுடையாருக்கு (சிவன்) அர்ச்சனைக்கு வில்வ இலை கொடுக்குமாறு கட்டளையிட்டுள்ளார். அதன்படி 2011-ம் ஆண்டு மார்கழி 1-ந்தேதி முதல் தற்போது வரை தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக வில்வ இலை கொடுத்து வருகிறார்.

    இது பற்றி கணேசன் கூறும்போது,

    "எனக்கு மங்கையற்கரசி என்ற மனைவியும், சுகன்யா, திவ்யா, ஆனந்தி என்ற 3 மகள்களும், மணிகண்டன் என்ற கண்பார்வை தெரியாத மகனும் உள்ளனர். 3 பெண்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கிராம நிர்வாக அதிகாரி வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின், மளிகைக் கடை நடத்தி வந்தேன். தற்போது அந்தக் கடையையும் மகளிடம் கொடுத்துவிட்டேன்.

    தினமும் இறைவன் எனக்கு வில்வ இலையை கொடுக்குமாறு கட்டளை இட்டதால் நான் தினமும் வில்வ இலையை பறித்து அர்ச்சனைக்காக வழங்கி வருகிறேன். தினமும் காலை 5.45 மணிக்கெல்லாம் கோவிலுக்கு குருக்கள் வரும் போது அவரிடம் அர்ச்சனை செய்வதற்கான வில்வ இலையை வழங்கி வருகிறேன். என்னிடம் இருசக்கர வாகனம், சைக்கிள் எதுவும் கிடையாது.

    எனவே நடந்தே கோவிலுக்கு சென்று வில்வ இலையை வழங்கி வருகிறேன். இறைவன் மீதான பக்தியால் பெருவுடையார் கோவிலுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள சங்கரநாராயணன் கோவிலுக்கும், கொங்கணேசுவரர் கோவிலுக்கும் கூட வில்வ இலையை வழங்கி வருகிறேன்.

    கடந்த 11 ஆண்டுகளாக எந்தமழை பெய்தாலும், புயல் அடித்தாலும் என் பணியை தவறவிட்டதில்லை. அதேபோல கோவில் குருக்களும் நான் தினமும் வழங்கி வருவதால், என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். வில்வ இலையை கொடுத்துவிட்டு அர்ச்சனை முடிந்து, சாமி தரிசனம் செய்த பிறகுதான் அங்கிருந்து மற்ற கோவிலுக்கு புறப்படுவேன். கொரோனா காலக்கட்டத்தில் கூட, ஒரு நாள் விடாமல் வில்வ இலையை வழங்கினேன்.

    ஊரடங்கின் போது காலை 6 மணிக்கு பிறகுதான் போலீசார் கெடுபிடி இருக்கும். அதேநேரம் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லாததால், அதிகாலை 4.30 மணிக்கே வில்வ இலையை பறித்துக்கொண்டு, பெரியகோவில் வாசலில் குருக்கள் வரும் வரை காத்திருந்து கொடுத்து விட்டு வீடு திரும்புவேன்.

    காசு, பணம் எல்லாம் கடவுளின் முன்பு ஒன்று மில்லை. பக்திதான் உயர்ந்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது வீட்டில் ஒரு தேங்காய் வைத்து வழிபட்டேன். அதைத்தான் தற்போதும் விநாயகராக போற்றி வணங்கி வருகிறேன்.

    ஒரு முறை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ஒரு அகோரி வந்து என்னை மளிகைக் கடையில் சந்தித்தார். அதோடு சிவன் தரச் சொன்னதாக ருத்ராட்ச மாலை ஒன்றையும் கொடுத்தார். அதைத்தான் தற்போதும் அணிந்திருக்கிறேன்.

    என்னுடைய உடலை விட்டு உயிர் பிரியும் வரை, வில்வத்தை வழங்க, இறைவன் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்றார்.

    • மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்றது.
    • சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழன் 1,038-வது சதயவிழா தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் அரசு விழாவாக நடைபெற்றது.

    நேற்று மாலை நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, நாத சங்கம், மற்றும் சதயவிழாக் குழு சார்பில் மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார்.

    விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதினை மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் தட்சிணாமூர்த்தி, தஞ்சை டாக்டர் செல்வராஜ், முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன், புலவர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கு விருதுகள் வழங்கபட்டன.

    இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, சதய விழாக்குழு துணைத்தலைவர் மேத்தா, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்.

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை ஏராளமான பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    ×