

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யை சந்தித்த மார்க் ஆண்டனி படக்குழு
இதை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யிடம் காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது விஜய் உடனே அழைப்பு விடுத்துள்ளார். அந்த சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீசரை கண்டு மகிழ்ந்த விஜய் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார். இதற்காக நன்றி தெரிவித்த விஷாலிடம், "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் விஜய் அவர்களுக்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், மேலும் விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் விஷால் வழங்கினார். தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக விஜய்யிடம் கூறிய விஷால், தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போது "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்ந்து பயணிப்போம்" என்று விஜய் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.