என் மலர்tooltip icon
    • கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும் திமுக
    • தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

    ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த 'கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு' இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரமாக வெடித்துள்ளது. நேற்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாத நிலையில், இன்று மீண்டும், தீபத்தூணியில் தீபம் ஏற்றவேண்டும் என்ற அதே உத்தரவை பிறப்பித்துள்ளார் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்.

    இதனால் தற்போதும் திருப்பரங்குன்றத்தில் பதற்றநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    "மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை செயல்படுத்தத் தவறி, இதனால் கடந்த இரண்டு நாட்களாக தேவையில்லாத ஒரு பதற்றத்தை உண்டாக்க கபட நாடகம் ஆடும்  திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    'எம்மதமும் சம்மதம்' - எம்மதத்தையும் சாராமல், நடுநிலையோடு ஆட்சி புரிபவர் சிறந்த ஆட்சியாளர் என்பதை மறந்து தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். " என குறிப்பிட்டுள்ளார். 

    • ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
    • பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார்.

    தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

    ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.

    • தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
    • அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்

    திருப்பரங்குன்றம் மலைத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை வரவேற்பதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதயம் நெகிழ வரவேற்கிறேன்! 

    தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைப் பறைசாற்றும் விதம் நூற்றாண்டு நிகழ்வு அரங்கேறியுள்ளது. முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருக பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இதைக் கொண்டாடும் விதமாக, அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் நம் இல்லங்களில் நாளை காலை "வெற்றிவேல்! வீரவேல்!'' என மாக்கோலமிட வேண்டுமெனவும் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    வெற்றிவேல்! வீரவேல்!" எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது.
    • இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

    நேற்றைய தினம் திமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.

    பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி அன்றே இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.

    இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?

    நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இருதரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

    தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது?

    திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
    • இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் கருத்து

    நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஆசிட் வீச்சு வழக்குகள் தொடர்பான விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ஆசிட் வீச்சில் இருந்து தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக்கின் வழக்கு தற்போது வரை விசாரணையில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் கருத்து தெரிவித்தனர்.

    கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மாலிக் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, "சட்ட அமைப்பை எவ்வளவு கேலிக்கூத்தாக்குவது இது. 16 வருடம் இப்படிப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது வெட்கக்கேடானது. ஒரு நாட்டின் தேசிய தலைநகராலேயே இதை கையாள முடியவில்லை என்றால், வேறு யார் செய்வார்கள்? இது தேசத்திற்கே அவமானம்" என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

    மேலும் இந்த வழக்கு ஏன் முடிவுக்கு வரவில்லை என்பதை விளக்கி, பொதுநல மனுவிலேயே ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டார். விசாரணையின்போது, ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை மாலிக் விவரித்தார். அவர்களில் பலர் நிரந்தர காயங்களுடன் வாழ்கின்றனர். செயற்கை உணவு குழாய்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அதனால் சில நலத்திட்டங்களை பெறமுடியும் எனவும் வாதிட்டார். 

    இதனைத்தொடர்ந்து ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் சேர்க்க சட்டம் அல்லது தேவைப்பட்டால் அவசரச் சட்டம் மூலம் சட்டத்தை திருத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி மத்திய அரசை வலியுறுத்தினார். மேலும் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் உறுதியளித்தார். 

    • தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் கூறியதாவது:

    தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

    மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனை 4.2 சதவீதமும், இரு சக்கர வாகனங்களின் விற்பனை 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 சதவீதமும் அதிகரித்துள்ளது.

    வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும் என தெரிவித்தார்.

    • இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
    • வரதட்சணைக் கேட்டதே திருமணம் நிற்க காரணம் என மணமகள் தரப்பு விளக்கம்

    பீகாரின் புத்தகயாவில் ரசகுல்லா பற்றாக்குறையால் திருமணம் நின்றுபோனது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 29 அன்று புத்த கயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருமண சடங்குகள் முடிந்த நிலையில், ரசகுல்லா பற்றவில்லை என பெண்ணின் வீட்டார் பிரச்சனையை தொடங்கியதாக புத்தகயா போலீசார் தெரிவித்தனர். பேச்சு திடீரென மோதலாக மாற இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலி, தட்டு என கையில் கிடைத்ததை வைத்து மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் பலரும் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் பொய்யான வரதட்சணை வழக்கைப் பதிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, மணமகளுக்கு பரிசளிக்க கொண்டு வந்த நகைகளை மணமகளின் குடும்பத்தினர் எடுத்துச் சென்றதாக மணமகனின் தாயார் முன்னி தேவி குற்றம் சாட்டினார். மேலும் ஹோட்டல் புக்கிங்கையும் அவர்களே செய்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தைத் தொடர ஒப்புக்கொண்டாலும், மணமகளின் குடும்பத்தினர் மறுத்ததாக, மணமகன் தரப்பு உறவினர் தெரிவித்தனர்.


    • திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
    • தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு நேற்று மாலை அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.

    அதன்பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.

    அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யவேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.

    அதன்பின், நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்ய மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிப்பார் எனவும் தெரிவித்தனர்

    இந்நிலையில், 144 தடை உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று மாலையே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மனுதாரர் 10 பேருடன் சென்று தீபமேற்ற பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு தராவிடில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு காவல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×