தொழில்நுட்பம்

போலி செய்திகளை தடுக்க வாட்ஸ்அப் புது முயற்சி

Published On 2018-10-13 05:26 GMT   |   Update On 2018-10-13 05:26 GMT
இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்தும் புதிய முயற்சியை வாட்ஸ்அப் துவங்கியுள்ளது. இதற்கென வாட்ஸ்அப் ஊழியர்கள் குழு இந்தியா வந்துள்ளது. #WhatsApp



இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் நோக்கில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. 

வாட்ஸ்அப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பிரச்சார வாகனம் மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில் சிறிய நாடகங்கள் மூலம் போலி செய்திகளை பரப்புவதால் ஏற்படும் ஆபத்தை விளக்கி வருகிறது. முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் பகுதியில் சிறிய நாடம் மக்களிடம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

நாடகத்தின் காட்சிகள், பயனர்கள் மிக எளிமையாக பரப்பும் போலி தகவல் எவ்வாறு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதன் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. 

போலி செய்திகளை கட்டுப்படுத்த ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளுக்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கையில் வாட்ஸ்அப் இறங்கியுள்ளது. ஜனவரி 2017 முதல் இதுவரை சுமார் 30 பேர் போலி செய்திகள் பரப்பப்படுவதால் கொல்லப்பட்டு இருப்பதாக இந்தியா ஸ்பென்ட் வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து இந்த நடவடிக்கையை துவங்கியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி சமீபத்தில் வழங்கப்பட்டது.

வாட்ஸ்அப் பிரச்சார திட்டத்தின் அங்கமாக ஜியோபோனில் எவ்வாறு வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பல லட்சம் இந்தியர்கள் முதல் முறையாக இன்டர்நெட் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
Tags:    

Similar News