நிலநடுக்கம் எதிரொலி- ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி கடிதம்
- நிலநடுக்கத்தால் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- 240 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என தகவல்.
புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானை சுனாமி தாக்கியது. ஜப்பானின் இஷிகவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது.
இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 240 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. நிலநடுக்கத்தின்போது சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
நிலநடுக்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தற்காப்புப் படைகளின் எண்ணிக்கையை 4,600 ஆக அதிகாரிகள் இரட்டிப்பாக்கியுள்ளனர்.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மற்றும் அதன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் ஃபுசியோ கிஷிடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜனவரி 1-ம் தேதி அன்று ஜப்பானில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் குறித்து அறிந்து மிகுந்த வேதனையும், கவலையும் அடைகிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜப்பானுடனும் அதன் மக்களுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.