உலகம்
தீயில் தரைமட்டமான வீடு

பாம்புக்கு பயந்து ரூ.12 கோடி வீட்டை கொளுத்திய தொழிலதிபர்

Published On 2021-12-08 01:56 GMT   |   Update On 2021-12-08 01:56 GMT
‘மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா’ என்கிற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் பாம்புக்கு பயந்து ஒருவர் தனது வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.
வாஷிங்டன் :

‘மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதா’ என்கிற பழமொழியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் பாம்புக்கு பயந்து ஒருவர் தனது வீட்டையே கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இது இங்கு இல்லை அமெரிக்காவில். அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு வீடு சொந்தமாக இருந்தது. இதன் மதிப்பு சுமார் 12 கோடியாகும். இவரது வீட்டுக்கு அடிக்கடி பாம்புகள் அழையா விருந்தாளியாய் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

அதன்படி சம்பவத்தன்று வழக்கம்போல் பாம்பு ஒன்று அவரது வீட்டுக்குள் வந்துள்ளது. பாம்பை விரட்டியடிக்க யோசித்த தொழிலதிபர் நிலக்கரி மூலம் புகையை ஏற்படுத்தி பாம்பை விரட்ட முடிவு செய்தார்.

அதன்படியே அவர் வீட்டுக்குள் நிலக்கரியை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீப்பிடித்தது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தொழிலதிபர் திகைத்துபோய் நின்றுவிட்டார். கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியதால் ஒட்டுமொத்த வீடும் கொழுந்துவிட்டு எரிந்தது.

சில நிமிடங்களிலேயே 12 கோடி மதிப்புடைய அந்த ஆடம்பர வீடு இருந்த இடம் தெரியாத அளவுக்கு சாம்பலாகி போனது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Tags:    

Similar News