செய்திகள்
ரஷ்ய ராணுவ விமானம் நடுவானில் தீப்பிடித்து வெடித்து சிதறியது - 3 பேர் பலி
ரஷ்யாவில் ராணுவ விமானம் தீப்பிடித்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோ:
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அருகே நேற்று காலை அந்நாட்டு விமான படைக்குச் சொந்தமான ஐஎல்-112 வி ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீ பிடித்தது. தீ பிடித்தபடியே சிறிது தூரத்துக்கு தாழ்வாக பறந்த விமானம் அங்குள்ள ஒரு வனப்பகுதிக்குள் விழுந்தது. தரையில் மோதிய வேகத்தில் அடுத்த சில நொடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது. இதில் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவ விமானம் தீ பிடித்தபடியே வானில் பறந்து பின்னர் வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.