செய்திகள்
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன்

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள இந்தியாவுக்கு கூடுதல் உதவி -அமெரிக்கா உறுதி

Published On 2021-04-25 04:00 GMT   |   Update On 2021-04-25 04:00 GMT
இந்தியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமைப்புகளை கடுமையாக பாதித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஏராளமான நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் இறந்துள்ளனர். 

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.



இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் துணை நிற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.

‘இந்திய அரசாங்கத்தில் எங்கள் கூட்டாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.  இந்திய மக்களுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார வீரர்களுக்கும் கூடுதல் ஆதரவை விரைவாக வழங்குவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்தியாவில் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த தொற்றுநோயை தைரியமாக எதிர்த்துப் போராடும் இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கூடுதல் பொருட்கள் மற்றும் ஆதரவை வழங்குவோம்’ என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உறுதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News