செய்திகள்
துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் சீக்கியர்கள் 4 பேர் பலி - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் இரங்கல்

Published On 2021-04-18 00:19 GMT   |   Update On 2021-04-18 00:19 GMT
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்' நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது.

நள்ளிரவில் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த நபர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் பெட்எக்ஸ் நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 8 பேரில் 4 பேர் சீக்கியர்கள் என்பதும் அவர்களில் 3 பேர் பெண்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு சீக்கியர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் சீக்கிய சமூகத்தின் தலைவர் குரிந்தர் சிங் கல்சா கூறுகையில் ‘‘இது இதயத்தை நொறுக்கும் சம்பவம். இந்தத் துயர சம்பவத்தால் சீக்கிய சமூகம் பேரழிவுக்குள்ளானது’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.



அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவும் இந்த சம்பவம் தொடர்பாக அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News