செய்திகள்
நவல்னி

கொடிய விஷ தாக்குதலுக்கு உள்ளான நவல்னி மீண்டும் ரஷியா சென்றார் - விமான நிலையத்தில் கைது

Published On 2021-01-17 18:39 GMT   |   Update On 2021-01-17 18:39 GMT
ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டார்.
மாஸ்கோ:

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து
ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.

தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையையடுத்து நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தன் மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின.

இதற்கிடையில், கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷியாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு நவல்னி வந்தார்.

அவரை மாஸ்கோ விமானநிலையத்திலேயே ரஷிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நவல்னி கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ரஷிய போலீசார் தெரிவிக்கவில்லை.

ரஷிய அதிபர் புதினை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தால் நவல்னி கைது செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஷிய எதிர்கட்சி தலைவரான நவல்னி கைது செய்யப்பட்ட சம்பவம் ரஷிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News