செய்திகள்
பிரதமர் யோஷிஹைட் சுகா

கொரோனா பரவல் அதிகரிப்பு - ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்

Published On 2021-01-07 21:17 GMT   |   Update On 2021-01-07 21:17 GMT
கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள டோக்கியோ, சிபா, சைதாமா மற்றும் கனகவா ஆகிய மாகாணங்களில் பிரதமர் யோஷிஹைட் சுகா அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
டோக்கியோ:

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இங்கு தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக தலைநகர் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள சிபா, சைதாமா மற்றும் கனகவா ஆகிய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது.

நேற்றைய நிலவரப்படி ஜப்பானில் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 52 ஆயிரத்து 317 ஆகவும், உயிரிழப்பு 3,719 ஆகவும் இருந்தது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள டோக்கியோ, சிபா, சைதாமா மற்றும் கனகவா ஆகிய மாகாணங்களில் பிரதமர் யோஷிஹைட் சுகா அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

இந்த அவசர நிலை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை அமலில் இருக்கும் என யோஷிஹைட் சுகா குறிப்பிட்டார்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படியும் கூடுமானவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News