செய்திகள்
ஹைட்ராக்சிகுளோரோகுயின்

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை நல்ல பலன் அளிப்பதாக தகவல்

Published On 2020-05-03 06:51 GMT   |   Update On 2020-05-03 06:51 GMT
அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மலேரியா மாத்திரைகள் தரப்படுவதாகவும், அவை நல்ல பலன் அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சையின்போது தரக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா நோயாளிகளுக்கு வைரசை கொல்வதில் நல்ல பலன் அளிக்கிறது என தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாத்திரையை தரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியது.



அதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் இந்த மாத்திரைகளை இந்தியாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்தன.

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கொரோனா சிகிச்சையில், இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்களிலும் அதிக இறப்பு பதிவாகி உள்ளது, இது கொரோனாவுக்கு பலன் தரும் என்பதற்கு ஆதாரம் இல்லை என அறிக்கைகள் வெளியாகின. இதுபற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப், இந்த மாத்திரைகள் பற்றிய நல்ல அறிக்கைகளும் வந்துள்ளன என்று ஆதரவாக கருத்து வெளியிட்டார்.

ஆனால் நியூயார்க் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தான் பலன் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

டிரம்பின் வேண்டுகோளை அடுத்து அமெரிக்காவுக்கு இந்தியா 5 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பல ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கியவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தரப்படுவதாக மருத்துவ ஊடக அறிக்கை (எம்டெட்ஜ்) வெளியாகி உள்ளது.

அங்கு கனெக்டிகட் மாகாணத்தில் ஆஸ்பத்திரிகளை நடத்தி வருகிற யேல் நியூ ஹெவன் சுகாதார அமைப்பில், கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு முதல் வரிசை சிகிச்சையின்போது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தரப்படுகின்றன, இரண்டாவதாக டோசிலிசுமாப் மருந்துகள் தரப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதில், “யேலில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்தான் முதலில் தரப்படுகின்றன. ஏனென்றால், அதில் சக்தி வாய்ந்த வைரஸ் தடுப்பு மற்றும் சாத்தியமான மருத்துவ நன்மை உள்ளது” என்று அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இதய மருத்துவ நிபுணர் நிகார் தேசாய் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும், “இது விலை மலிவானது, பல்லாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் தரப்படும்போது கொரோனா நோயாளிகள் நல்லதொரு நிவாரணம் பெறுகிறார்கள். எங்களால் முடிந்ததை நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் யேல் நியூ ஹெவன் ஆஸ்பத்திரியில் உள்ள வார்டுகளில் சரிபாதி அளவில், அதாவது 400-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் முதலில் தரப்படுவது ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள்தான் என்றும் அந்த அறிக்கையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News