செய்திகள்
மருத்துவர்களின் பாதுகாப்பு கவச உடை

இங்கிலாந்தில் மருத்துவ கவச உடைகளுக்கு கடும் தட்டுப்பாடு

Published On 2020-04-21 06:26 GMT   |   Update On 2020-04-21 06:26 GMT
இங்கிலாந்தில் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
லண்டன்:

இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆஸ்பத்திரிகளில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் தினமும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக பணியாற்றி வருகின்றனர்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது இவர்களும் கொரோனா வைரசால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழக்கும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது. இதுபோல், நேற்று வரையிலான கடந்த 20 நாட்களில் கொரோனாவுக்கு டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் என 95 பேர் பலியாகி உள்ளனர். இது இங்கிலாந்து ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.



இந்த நிலையில், சிகிச்சையின்போது டாக்டர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கையிருப்பில் உள்ள கவச உடைகள் இன்னும் ஓரிரு நாட்களுக்கே கைகொடுக்கும் என்னும் நிலை காணப்படுகிறது. இதையடுத்து, துருக்கி நாட்டில் இருந்து 4 லட்சம் கவச உடைகளை பெற அவசர ஆர்டர் கொடுக்கப்பட்டதில் 40 ஆயிரம் உடைகளே வந்து சேர்ந்துள்ளது.

கவச உடைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதால் பழைய உடைகளை சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஆய்வகங்களில் அணியும் வெள்ளை கோட்டுகளை தற்காலிகமாக டாக்டர்கள் உபயோகிக்கலாம் என்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு, ‘பிரிட்டி‌‌ஷ் மருத்துவ சங்கம்’ பலத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ‘‘டாக்டர்களின் உயிருக்கு பாதுகாப்பு இருந்தால்தான் அவர்களால் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற இயலும். எனவே டாக்டர்களின் உயிருக்கும் மதிப்பளியுங்கள். புதிய கவச உடைகள் கிடைக்காமல் போனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை டாக்டர்கள் நிறுத்த நேரிடும்’’ என்று அச்சங்கம் எச்சரிக்கை உள்ளது.
Tags:    

Similar News