செய்திகள்
பெஞ்சமின் நேதன்யாகு

கொரோனா பீதி: இஸ்ரேல் பிரதமர் மீதான ஊழல் வழக்கு விசாரணை மே 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2020-03-15 08:24 GMT   |   Update On 2020-03-15 08:24 GMT
பதவியை தவறாக பயன்படுத்தி பண ஆதாயம் அடைந்ததாக இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது தொடரப்பட்ட வழக்கு கொரோனா பீதியால் மே 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெருசலேம்:

யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு(70) கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். தன் மீதான புகாரை பெஞ்சமின் நேதன்யாகு மறுத்து வந்தார். அவரது மனைவி சாரா மீதும் ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



விசாரணையின் அறிக்கையை வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஊழல் தொடர்பான விசாரணை ஜெருசலேம் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி இவ்வழக்கு விசாரணையின்போது பெஞ்சமின் நேதன்யாகு ஆஜராவதற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதற்கிடையில், உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பீதி அதிகரித்து வருவதால் இஸ்ரேல் நாட்டில் பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதற்கும் விழாக்கள் போன்றவற்றை பெரிய அளவில் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெஞ்சமின் நேதன்யாகு நீதிமன்றத்துக்கு வந்தால் அதிகமான அளவில் ஜெருசலேம் நகரில் மக்கள் கூடுவார்கள் என்பதால் நாடு முழுவதும் வெளியிடப்பட்டுள்ள சுகாதாரத்துறை பொது எச்சரிக்கை அறிவிப்பின்படி, இவ்வழக்கின் அடுத்த விசாரணை மே மாதம் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News