செய்திகள்
வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் - பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது

Published On 2020-01-28 02:00 GMT   |   Update On 2020-01-28 02:00 GMT
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. மேலும், 1300 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பீஜிங்:

* சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 
* நோய் பரவாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
* கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நூறை தாண்டியுள்ளது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.
 
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

குரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரம் மட்டுமின்றி பல்வேறு மாகாணங்களில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, நேற்று நிலவரப்படி குரோனா வைரசுக்கு 80 பேர் பலியாகியிருந்தனர். அதன்பின், மேலும் 26 பேர் பலியானதையடுத்து, இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. சீனா முழுவதும் 1300 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News