செய்திகள்
கோப்பு படம்

ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 பயங்கரவாதிகள் பலி

Published On 2019-12-18 10:41 GMT   |   Update On 2019-12-18 10:41 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 25 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான், ஐஎஸ் அமைப்பினர், கிளர்ச்சியாளர்கள் என பல்வேறு பயங்கரவாத குழுக்கள் பல பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திவருகின்றனர். இந்த குழுக்கள் தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். 

மேலும், பயங்கரவாதிகள் ராணுவம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இவர்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அந்நாட்டின் காந்தகார் மாகாணம் ஷாவாலிகோட் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போர் விமானங்கள் உதவியுடன் பாதுகாப்பு படையினர் கடந்த 24 மணிநேரமாக அதிரடி தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், சில பயங்கரவாதிகள் படுகாயமடைந்திருக்கலாம் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News