செய்திகள்
ஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி
ஜப்பான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
டோக்கியோ:
பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக 78 பேர் உயிரிழந்தனர். சுமார் 400 பேர் காயமடைந்தனர்.
இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் நியோகுரி, புலாய் எனும் இரு புதிய புயல்கள் ஜப்பானை நெருங்கி வருவதாகவும் அக்டோபர் 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுமார் 2,000 பொதுமக்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய நகரங்களில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.