செய்திகள்
உலகின் சிறந்த எதிர்காலத்துக்கு இந்திய அரசின் நலத்திட்டங்கள் நம்பிக்கை அளிக்கிறது - மோடி பெருமிதம்
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் சிறந்த எதிர்காலத்துக்கு இந்திய அரசின் நலத்திட்டங்கள் நம்பிக்கை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தின விழாவை கொண்டாடும் வேளை இது. இந்தியாவில் 100 கோடிக்கு மேலானோர் வாக்களித்து இந்த அரசை தேர்வு செய்தனர்.
முன்னேறி வரும் ஒரு நாடு தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் மூலம் உலகின் மிக் பெரிய சுகாதார இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து ச்சென்று, ஐந்தாண்டுகளுக்குள் 11 கோடி கழிப்பிடங்களை கட்டித்தர இயலுமானால் இந்த சாதனை ஒட்டுமொத்த உலகுக்கு ஊக்கமளிக்க கூடிய செய்தியாக அமையும்.
இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 370 மில்லியன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவங்கியுள்ளோம். தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
2025-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்து வருகிறோம்.
ஊரகப் பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3,000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியுள்ளது. எங்களுக்கென தனியாக கலை, கலாச்சாரம் இருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் தீட்டி இருக்கிறோம்.
உலக வெப்பமயமாதலை தடுப்பதை நினைவில் கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம், அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவளித்து, எங்களை காயப்படுத்தி வருகின்றன என தெரிவித்தார்.