செய்திகள்
இந்திய தூதரகம் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது - பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த வன்முறை போராட்டம் வருத்தம் அளிக்கிறது என வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
லண்டன்:
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் தூதரக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது.
இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட போராட்டக்காரர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் வெளியிட்டது.
இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் வடமேற்கு காம்பிரிட்ஜ் தொகுதி உறுப்பினர் ஷைலேஷ் வாரா பேசியபோது, இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரி டொமினிக் ராப் பேசுகையில், இந்த வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இது வருந்தத்தக்கது. இதுபோன்று எங்கும் நடக்கவே கூடாது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நம்பிக்கையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.