செய்திகள்
ஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்து உள்ளனர் எனவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது.
இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 180க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.