செய்திகள்
அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை
அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள ஒரு கல்லூரியில், கணினிகளை சேதப்படுத்திய வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
இந்தியாவைச் சேர்ந்தவர் விஷ்வநாத் (27). இவர் அமெரிக்காவில் ஸ்டூடண்ட் விசாவில் தங்கி படித்து வருகிறார். இவர் நியூ யார்க் மாநிலம் அல்பானி நகரில் உள்ள புனித ரோஸ் கல்லூரியில் உள்ள கணினிகளை சேதப்படுத்தியதாக கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில், யுஎஸ்பி கில்லர் எனும் சாதனத்தை கல்லூரிக்கு சொந்தமான 66 கணினிகளில் பொருத்தி சேதப்படுத்தியது தெரியவந்தது. இந்த சாதனம் பொருத்தப்பட்ட உடனே கணினியின் உள்ள மின் சுற்று பலகையில் இருக்கும் மின்தேக்கிகள் உடனடியாக சார்ஜ் ஏற்றப்பட்டு மீண்டும் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றன. இதனால் ஏற்படும் அதிக மின்னழுத்தம் காரணமாக மின் அமைப்புகள் மற்றும் கணினியின் யுஎஸ்பி போர்ட் சேதமடைந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
விஸ்வநாத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு ஒரு வருட சிறை தண்டனையும், 58,471 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.