செய்திகள்
இந்திய தூதர் இன்னும் ஏன் இங்கே இருக்கிறார்? பாகிஸ்தான் மந்திரி கேள்வி
காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர்களது தூதர் மட்டும் ஏன் இன்னும் பாகிஸ்தானில் உள்ளார் என அந்நாட்டு மந்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமாபாத்:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஃபவாத் சௌத்ரி கூறியதாவது:-
காஷ்மீர் விவராகத்தில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு விரும்பாத நிலையில் அவர்களது தூதர் மட்டும் இன்னும் ஏன் பாகிஸ்தானில் இருக்கிறார். இந்திய தூதர் நமது நாட்டில் இருப்பதால் யாருக்கு என்ன பயன். மேலும், இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் அரசு உடனடியாக துண்டிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.