செய்திகள்
தாக்குதலுக்குள்ளான கார்.

நூலிழையில் தப்பிய முன்னாள் காதலி, குடும்பத்தை தீர்த்துக்கட்டிய காதலன்

Published On 2019-07-31 13:38 GMT   |   Update On 2019-07-31 13:38 GMT
அமெரிக்காவில் துப்பாக்கி குண்டுக்கு முன்னாள் காதலி தப்பிய நிலையில் அவரது குடும்பத்தை தீர்த்துக்கட்டி தானும் தற்கொலை செய்து கொண்ட காதலன்.
டெக்சாஸ்:

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள ஹூஸ்டன் நகரில் ரோஷன்பர்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நெடுச்சாலையில் பெண் ஒருவர் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த காரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு காரை நோக்கி சரமாரியாக சுட்டார். 

இந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் நிலைகுலைந்த பெண் அதிஷ்டவசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அறிந்த போலீசார் தாக்குதலில் காயமடைந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தனது முன்னாள் காதலன் ஜூயன் டிலீயோன் (42) தான் என்றும், மேலும் அவனால் தனது குடும்பத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் எனவும் புகார் அளித்தார்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண்ணின் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசார் செல்வதற்கு முன் அந்த பெண்ணின் தாய் மற்றும் அவரது உறவினர் ஒருவரும் வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த கொலை சம்பத்திற்க்கு காரணமாக கருதப்பட்ட டிலீயோனியை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.

ஆனால், போலீசார் கைது செய்ய வருவதற்குள் டிலீயோன் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தனது காரில் பிணமாக கிடந்தார். இதை தொடர்ந்து உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      
Tags:    

Similar News