செய்திகள்

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை - உலக சுகாதார நிறுவனம் தகவல்

Published On 2018-09-12 05:58 GMT   |   Update On 2018-09-12 05:58 GMT
ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் தெரிவிரித்த உலக சுகாதார நிறுவனம், அதில் இளைய பருவத்தினரே அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நியூயார்க்:

சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமி‌ஷனும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில் தற்கொலையில் இருந்து மீட்பது குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், உலகில் அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அவ்வளவு ஏன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது.

அதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். அவர்கள் ஒருமுறை அல்லது 2 முறையல்ல. 20 தடவை தற்கொலைக்கு முயன்று தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 முதல் 29 வயது நிரம்பிய இளைய பருவத்தினரே அதிகம். அவர்களின் மரணம் குடும்பத்தினரை மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை பெருமளவில் பாதிக்கிறது.

தற்கொலை செய்பவர்களில் 20 சதவீதம் பேர் வி‌ஷம் குடித்து தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இது வருமானம் குறைந்த அல்லது ஓரளவு வருமானம் பெருகிய நாடுகளில் கிராமப் புறங்களில் தான் அதிக அளவில் நடைபெறுகிறது. அவர்களில் பெரும்பாலோர் விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

இதற்கு அடுத்தபடியாக தூக்குபோட்டும், தீக்குளித்தும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. அதேநேரத்தில் பணக்கார நாடுகளில் மனநலம் பாதிப்பு மற்றும் மன அழுத்தம், மது போதை மற்றும் போதை மருந்து உள்ளிட்டவைகளால் தற்கொலைகள் நடைபெறுகின்றன.

மனதூண்டுதல் மற்றும் திடீரென உணர்ச்சி வசப்பட்டு பல தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க மது மற்றும் போதை மருந்து குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். தற்கொலை செய்பவர்களின் எண்ணத்தை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News