செய்திகள்

ஆட்சிக்கு எதிராக கலகம் - எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை

Published On 2018-09-08 11:24 GMT   |   Update On 2018-09-08 11:24 GMT
எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை பதவிநீக்கம் செய்து ஆட்சியை கைப்பற்றிய அப்டெல் பட்டா சிசியின் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Egyptsitin #75sentencedtodeath
கெய்ரோ:

எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் உள்ள ரப்பா அடாவியா சதுக்கத்தில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.

அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், அதிபர் அப்டெல் பட்டா சிசியின் ஆட்சிக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


அவர்களில் சுமார் 700 பேர் மீதான வழக்கு விசாரணையில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலர் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் எஸ்ஸாம் அல்-ஏரியான், முஹம்மது பெல்ட்டாகி உள்பட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Egyptsitin #75sentencedtodeath  
Tags:    

Similar News