செய்திகள்
மாலி தேர்தலில் இபுராஹிம் பவுபக்கர் கெய்ட்டா வெற்றி பெற்றதாக கோர்ட் தீர்ப்பு
மாலி அதிபர் தேர்தலில் வெளியான முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இபுறாஹீம் பவுபக்கர் கெய்ட்டா வெற்றி பெற்றதாக அரசியலமைப்பு கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #Malielectionrunoff #Malielection #IbrahimBoubacarKeita
பமாக்கோ:
தங்கம் மற்றும் பருத்தி உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதல்முறையாக மிக மந்தமான வாக்குகளே பதிவாகின.
தேர்தல் வன்முறை சம்பவங்களால் சுமார் 5 சதவீதம் வாக்குச்சாவடிகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் 644 வாக்குச்சாவடிகளை (சுமார் 3 சதவீதம்) பயங்கராவாதிகள் கைப்பற்றி கொண்டதால் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் வெறும் 43 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.
பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா 41.4 சதவீதமும் அவரை எதிர்த்து களமிறங்கிய சவுமைலா சிஸ்ஸி 17.8 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதிபராவதற்கு பெற வேண்டிய அதிகபட்ச அளவான 50 சதவீதம் வாக்குகளை இருவரும் பெறாததால் விரைவில் இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெற்ற இரண்டாம் சுற்று தேர்தலில் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டாவுக்கு 67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தல் முடிவை ஏற்றுகொள்ள மறுத்த எதிரணி வேட்பாளர் சவுமைலா சிஸ்ஸே அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு செல்லும் என தீர்ப்பளித்தார். #Malielectionrunoff #Malielection #IbrahimBoubacarKeita