செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு சிதைந்த முகம் - முகம்மாற்று ஆபரேஷன் மூலம் சாதித்த மருத்துவர்கள்

Published On 2018-08-16 12:23 GMT   |   Update On 2018-08-16 12:23 GMT
தன்னைத்தானே சுட்டுக்கொண்ட இளம்பெண்ணுக்கு 31 மணி நேரம் நடந்த முகம்மாற்று ஆபரேஷன் மூலம் ஆளையே அமெரிக்க டாக்டர்கள் மாற்றிக்காட்டியுள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவில் வசித்த கேத்தி ஸ்டபல்பீல்ட் என்ற பெண் கடந்த 2014-ம் ஆண்டு தற்கொலை செய்யும் நோக்கத்தில் தனது முகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். அவரது முகத்தில் குறிப்பாக நெற்றி, கண்கள், வாய், மூக்கு ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் உயிர் பிழைப்பாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேத்திக்கு, பல இடங்களிலும் இருந்து நன்கொடைகள் குவிந்து வந்தது. அவரது உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவரது முகம் சிகிச்சைக்கு பின்னர் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டது. 

இதனால், யாராவது முகம் தானமாக கொடுத்தால் கேத்தியின் முகத்தை சீரமைக்க முடியும் என மருத்துவர்கள் கேத்தியின் பெயரை பதிவு செய்து வைத்தனர். அதிகமான போதைப் பொருள் உட்கொண்டதில் உயிரிழந்த பெண் ஒருவரின் முகம் கேத்திக்கு தானமாக அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 31 மணி நேரம் நீடித்த ஆபரேஷனுக்கு பிறகு கேத்தியின் முகம் சீரமைக்கப்பட்டுள்ளது. தனக்கு பெரிய மன உறுதி கிடைத்துள்ளதாக கூறிய கேத்தி, புதிய வாழ்க்கையை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

21 வயதில் முழு முகத்தை மாற்று சிகிச்சையின் மூலம் பெற்ற ஆக இளைய அமெரிக்கர் என்ற பட்டமும் கேத்திக்கு கிடைத்துள்ளது.
Tags:    

Similar News