செய்திகள்
வங்காளதேசத்தில் பழங்குடியின தலைவர்கள் சுட்டுக்கொலை- இரு மாவட்டங்களில் பதற்றம்
வங்காளதேசம் நாட்டின் தென்கிழக்கில் உள்ள மலையோரப் பகுதியில் பழங்குடியின தலைவர்கள் 5 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இரு மாவட்டங்களில் வன்முறை பரவியுள்ளது. #tribalparty #leaderskilled
டாக்கா:
வங்காளதேசம் நாட்டின் மலைப்பகுதியான ரங்கமாட்டி, காக்ராச்சாரி மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி என்னும் பழங்குடியினர் கட்சி செல்வாக்குடன் இருந்து வருகிறது. பழங்குடியின மக்களுக்கு சுயாட்சி உரிமையுடன் கூடிய தனிப்பகுதியை பிரித்து தர வேண்டும் என இந்த கட்சி போராடி வருகிறது.
இந்த கட்சியில் இருந்து விலகி ஜனசங்கதி சமிதி என்ற புதிய கட்சியை உருவாக்கிய தலைவரான ஷக்திமான் சக்மா என்பவர் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நானியாச்சார் துணை மாவட்டத்தில் அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பழங்குடியின தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் சிலர் சென்ற ஒரு பஸ்சை வழிமறித்த சிலர், உள்ளே இருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். எதிர்பாராத இந்த தாக்குதலில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பான தகவல் பரவியதும் ரங்கமாட்டி, காக்ராச்சாரி மாவட்டங்களில் வன்முறை பரவியுள்ளது. பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடி வரும் 4 பிரிவினருக்குள் போட்டியும் பகையும் நீடித்துவரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #tribalparty #leaderskilled