செய்திகள்

பாகிஸ்தானில் திருவிழாவுக்குச் சென்று காணாமல் போன சீக்கிய வாலிபரின் இருப்பிடம் தெரிந்தது

Published On 2018-04-24 09:44 GMT   |   Update On 2018-04-24 09:44 GMT
பாகிஸ்தானில் காணாமல் போன சீக்கிய வாலிபரின் இருப்பிடம் தெரியவந்துள்ள நிலையில் இன்று அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
இஸ்லாமாபாத்:

சீக்கிய மதத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 15-4-1469 அன்று பிறந்தார். குருநானக் பிறந்த பகுதி அவரது நினைவாக நான்கானா சாகேப் மாவட்டமாக அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தின் தலைநகராக விளங்கிவரும் குருநானக் நகரில் பிரமாண்டமான சீக்கிய ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்களின் புனிதத்தலமாக மதிக்கப்படுகிறது. ‘பைசாக்கி’  பண்டிகையையொட்டி இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் உலக நாடுகளில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் வந்து கலந்துகொள்வதுண்டு.

அவ்வகையில், பைசாக்கி திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற சுமார் 1700 யாத்ரீகர்கள் கொண்ட குழுவில் 33 வயது இந்து விதவைப்பெண் சமூகவலைத்தளத்தில் தனக்கு அறிமுகமான இஸ்லாமியரை திருமணம் செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி செய்தி சமீபத்தில் வெளியானது.

காணாமல் போன வாலிபரின் தகவல்கள்

இதையடுத்து, இவ்விழாவில் பங்கேற்க இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் இருந்து சென்ற யாத்ரீகர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த அமர்ஜித் சிங் (24) என்ற வயது சீக்கிய மாணவர் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில், தனக்கு பேஸ்புக் மூலம் பழக்கமான பாகிஸ்தான் நண்பர் அமிர் ரசாக் என்பவரை சந்திப்பதற்காக குருநானக் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஷேக்புரா பகுதிக்கு சென்ற அமர்ஜித் சிங் அவரது வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.

அமர்ஜித் சிங் காணாமல் போனதாக செய்திகள் வெளியானதும், அமிர் ரசாக்கின் குடும்பத்தினர் லாகூரில் உள்ள சீக்கிய அமைப்பை தொடர்புகொண்டு அமர்ஜித் தங்கள் வீட்டில் தங்கி இருப்பதை தெரிவித்தனர். இதைதொடர்ந்து இன்று பாகிஸ்தானில் இருந்து அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
Tags:    

Similar News