செய்திகள்

அமெரிக்காவில் கார் பயணத்தின்போது மாயமான இந்தியரின் மகனின் உடலும் மீட்பு

Published On 2018-04-17 23:19 GMT   |   Update On 2018-04-17 23:19 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சந்தீப் மகனின் உடலையும் கைப்பற்றினர்.
வாஷிங்டன்:

இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத்தை பூர்வீகமாக கொண்டவர், சந்தீப் (வயது 42). அமெரிக்க நாட்டில் வங்கி ஒன்றில் உயர் பதவி வகித்து வந்த இவர், மனைவி சவுமியா (38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி (9) ஆகியோருடன் கலிபோர்னியா மாகாணம், வேலன்சியா நகரில் வசித்து வந்தார்.

சமீபத்தில் அவரும், குடும்பத்தினரும் ஒரேகான் மாகாணம், போர்ட்லேண்ட் நகருக்கு சென்று விட்டு, வேலன்சியா திரும்பிக்கொண்டிருந்தபோது காருடன் மாயமாகினர். அவர்கள், ஏல் ஆற்றில் வெள்ளத்தில் காருடன் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணி நடந்தது. முதலில் சவுமியாவின் உடல் கடந்த 13-ந்தேதி மீட்கப்பட்டது. இந்த நிலையில், அவர்கள் காருடன் அடித்துச்செல்லப்பட்ட இடத்தில் இருந்து அரை கி.மீ. வடக்கே, நேற்று முன்தினம் கியாஸ் கசியும் நாற்றம் வந்து உள்ளது. இதை படகில் பயணம் செய்த ஒரு குழுவினர் கண்டறிந்து, போலீசில் புகார் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சந்தீப் குடும்பத்தினர் பயணம் செய்த கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காருக்குள் சந்தீப்பும், அவரது மகள் சாச்சியும் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் சந்தீப்பின் மகன் சித்தாந்த் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 6 கி.மீ வடக்கே சித்தாந்தும் பிணமாக நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

Similar News