செய்திகள்

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. சபை கண்டனம்

Published On 2018-03-13 05:22 GMT   |   Update On 2018-03-13 05:22 GMT
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. சபை அதிகாரி கண்டனம் தெரிவித்துளளார்.
கொழும்பு:

இலங்கையில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. மசூதிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா இலங்கை முழுவம் அவசர நிலையை பிரகடனம் செய்தார். கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. சபையின் அரசியல் விவகார பிரிவு உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இலங்கை வந்தனர். கொழும்பில் தங்கியிருந்த ஜெப்ரி பெல்ட்மனை இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சந்தித்தனர். அவர்களிடம் கண்டி, அம்பாறை பகுதிகளில் நடந்த கலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அப்போது, முஸ்லிம் மந்திரிகள் ரவூப் ஹக்கீம், எச்.ஏ.எம்.பவுசி, கபீர் காசிம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் சந்தித்து நடத்த விவரங்களை தெரிவித்தனர்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மந்திரியுமான ரவூப் ஹக்கீம் ஐ.நா. அதிகாரி ஜெப்ரி பெல்ட்மனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “இலங்கையில் விடுதலை புலிகளுடனான இன போருக்கு பின்னர் முஸ்லிம்களை இலக்கு வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இனவாதம் வேரூன்றி விட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மனுவை பெற்றுக் கொண்ட ஜெப்ரி கூறும்போது, “நாட்டில் ஜனங்களுக்கு இடையிலான நல்லிணத்துக்கு இத்தகைய வன்முறை சம்பவங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்படுகின்றன” என்றார்.

முன்னதாக அவர் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, தமிழ் தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார்.

தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜெப்ரி பேட்ஸ்மன் ஐ.நா. திரும்பினார். இதை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களும், அவர்களது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட செயல்களும் கடும் கண்டனத்துக்குரியது. அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News