செய்திகள்

என்னை சுட்டுக் கொல்லுங்கள்: ராணுவத்தினரிடம் பிலிப்பைன்ஸ் அதிபர் உருக்கம்

Published On 2018-01-22 13:40 GMT   |   Update On 2018-01-22 13:40 GMT
அரசியலமைப்பு சட்டத்தை மீறி சர்வாதிகாரியாக நான் முயற்சித்தால் ராணுவம் மற்றும் போலீசார் என்னை சுட்டுக் கொல்லலாம் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே இன்று குறிப்பிட்டுள்ளார். #RodrigoDuterte
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். 

இதுதவிர, ஆட்சி மற்றும் நிர்வாகரீதியாக பல்வேறு சீர்திருத்தங்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். நாட்டின் பன்முகத்தன்மையை மாற்றி ஒருமுகப்படுத்தப்பட்ட மத்திய ஆட்சிக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலம் அனைத்து மாகாணங்களிலும் சமச்சீரான ஆட்சி முறையை அறிமுகப்படுத்தவும் ரோட்ரிகோ டுட்டர்ட்டே முயன்று வருகிறார்.

அவரது இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாட்டின் சர்வாதிகாரியாக முன்னர் உருவெடுத்த முன்னாள் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் கடைபிடித்த ஆரம்பகால தந்திரத்தை தற்போது ரோட்ரிகோ டுட்டர்ட்டே கடைபிடித்து வருவதாகவும், இதன்மூலம் தனது பதவிக்காலத்தை வரும் 2020-ம் ஆண்டுவரை நீட்டித்துகொள்ள அவர் முயற்சித்து வருவதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் மணிலாவில் இன்று ராணுவ தலைமை முகாமை ரோட்ரிகோ டுட்டர்ட்டே பார்வையிட்டார். அங்கு பேசிய அவர்,  ‘இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையும் மக்களையும் பாதுகாக்க வேண்டியது ராணுவத்தினர் மற்றும் போலீசாரின் தலையாய கடைமையாகும்.

எனது பதவிக்காலத்துக்கும் அதிகமாக நான் ஆட்சி செய்ய விரும்பினாலோ, அல்லது சர்வாதிகாரியாக மாறினாலோ நீங்கள் என்னை சுட்டுக் கொல்லலாம். நான் இதை விளையாட்டாக கூறவில்லை’ என்று குறிப்பிட்டார். #tamilnews #RodrigoDuterte #shoot
Tags:    

Similar News