செய்திகள்

50 ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா பாலி தீவில் எரிமலை வெடித்தது

Published On 2017-11-22 05:35 GMT   |   Update On 2017-11-22 05:57 GMT
50 ஆண்டுக்கு பிறகு இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் எரிமலை வெடித்து உள்ளதால் அங்கிருந்த பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஜகார்த்தா:

இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது.

இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கியுள்ளது. அதில் இருந்து புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்து சிதறும் நிலை உள்ளது.

எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.

பாலித்தீவு அழகிய பகுதிகளை உள்ளடக்கியது.விடுமுறை தீவு என அழைக்கப்படும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். தற்போது இங்கு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்துவிட்டது.

இதனால் அங்கு ரூ.500 கோடி அளவுக்கு வருமானம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இங்கு 1963-ம் ஆண்டு அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்தது. அப்போது 1600 பேர் உயரிழந்தனர்.

அதன் பின்னர் தற்போது தான் இந்த எரிமலை வெடித்துள்ளது. இருந்தும் தற்போது வரை பாலித் தீவுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. எந்தவித பாதிப்பும் இன்றி விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. சுற்றுலா பகுதிகள் பாதுகாப்பாக உள்ளன என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News